புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல், காதில் தோடு.. இனி இந்த ரவுடி கெட்டப் கூடாது.. திண்டுக்கல் போலீஸ் அதிரடி!
திண்டுக்கல்: புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி .சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீங்கள் செய்வதை விஜய் விரும்பவில்லை.. இனி இப்படி செய்தால் நடவடிக்கை.. விஜய் மக்கள் இயக்கம் வார்னிங்!
ஆய்வாளர்கள்
மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், ரவுடி சிறப்பு படை மற்றும் தனிப்படையினர் கைத்துப்பாக்கியுடன் ரோந்து செல்லுமாறு எஸ்பி அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியுடன் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வாளர்
அதேபோல திண்டுக்கல் நகரில் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மகேஷ் மற்றும் காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ரவுடி போன்ற தோற்றத்தில், அடர்ந்த முடி வைத்து கொண்டு, காதில் ஒற்றை தோடை (கம்மல்) மாட்டிக் கொண்டு வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தினர்.
காதில் தோடு
பின்னர் காதில் அணிந்திருந்த தோடுகளை கழற்ற வைத்து, முடியை ஒழுங்காக வெட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். மேலும் திண்டுக்கல்லில் உள்ள சலூன் கடைக்காரர்கள் தேவையில்லாமல் ஒழுங்கற்ற முறையில் கலர் கொடுத்து (புள்ளிங்கோ ஸ்டைலில்) முடி வெட்டுவது, ரவுடி கெட்டப்பில் முடி வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
கொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் இருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டிஜிபி சைலேந்திர பாபு தென் மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருந்தார். மேலும் கடந்த 3 தினங்களாக ரவுடிகளை தேடும் நடவடிக்கையில் 3500க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த நிலையில், தமிழகத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர் கே வி குப்பம்
வேலூர் மாவட்டம் கே வி குப்பத்தில் உள்ள ஒரு பள்ளி அண்மையில் திறக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த மாணவர்கள் முடிகளை வெட்டாமல் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிகளை வளர்த்து வைத்திருந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் முடித்திருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து மரத்தடியில் அமரவைத்து ஒட்ட வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
விஜய்யின் மாஸ்டர்
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் மாணவர்களை திருத்தும் பணியில் விஜய் ஈடுபடுவார். அந்த பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்படுவார். அவர் அந்த சிறார் பள்ளியில் நடந்த ஒரு சோக சம்பவத்திற்கு பிறகு தனது கல்லூரி மாணவர்கள், சக பேராசியர்களை வரவழைத்து அந்த பள்ளியில் உள்ள போதை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, மாணவர்களை நல்வழிப்படுத்தும் செயலில் ஈடுபடுவார். அப்போதுதான் அங்குள்ள சிறுவர்கள் தலைநிறைய முடியை வளர்த்திருப்பர். அவர்களை உட்காரவைத்து கல்லூரி மாணவர்களான சாந்தனு உள்ளிட்டோரை கொண்டு முடித்திருத்தம் செய்வார். அப்போது முதல் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் பிரபலமாகும்.