அங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் எம்ஜிஆர் தலையிலேயே கை வைத்து விட்டாரே திண்டுக்கல் சீனிவாசன்
எம்ஜிஆர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
Recommended Video
திண்டுக்கல்: இப்போது ஒன்றல்ல, 3 விஷயங்களை ஒரே நேரத்தில் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவ்வளவு நாள் அடுத்த கட்சியில் இறங்கி தூர் வாரி பரபரப்பை ஏற்படுத்தியவர், இப்போது, சொந்தக் கட்சிக்குள்ளேயே புகுந்து விட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது 3 விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.
முதலாவதாக, "ஒரு பசு மாட்டுக்கு ரூ.500 வீதம் விலையில்லா பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார். அதாவது, பால் உற்பத்தியை பெருக்க, ஒரு பசு மாடு வீதம் 500 விலையில்லா பசுமாடுகள் அரசு தரப்பில் தரப்பட்டுள்ளதைதான் அமைச்சர் இப்படி மாற்றி சொன்னார். "ஒரு கறவை மாட்டின் விலை 500 ரூபாயா" என்று கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
கல்வித்துறை
இரண்டாவதாக, "தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எதற்காக? நம் மாநிலம் கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்.
பெரிய தொகை
இதைக் கேட்டதும் மேடையில் உட்கார்ந்திருந்த கலெக்டர் உள்ளிட்டவர்கள் ஷாக் ஆனார்கள். ஏனென்றால், பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 28, 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் சொல்லும் வெறும் 28 லட்ச ரூபாயில் எத்தனை ஸ்கூலை கட்ட முடியும்? கல்வி துறைக்காகவே இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியிருக்கும்போது, அதை கோடியிலிருந்து லட்சத்தில் கொண்டு வந்து அடக்கிவிட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
எம்ஜிஆர்
மூன்றாவதாக, "எம்ஜிஆர் எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த ஆட்சிக்கு முன்னால் நடைபெற்று வந்த ஆட்சியை குறை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்" என்றார் திண்டுக்கல்லார். இதைக்கேட்டதும் மேடையிலிருந்தவர்கள் மட்டுமல்ல, கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து ஆடிப்போய் விட்டார்கள். அடுத்தவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர் என்று பொதுக்கூட்ட மேடையில், அதுவும் அதிமுக அமைச்சரே இப்படி பேசியதுதான் இன்றைய ஹாட் டாக்-ஆக உள்ளது.
மக்கள் ஷாக்
அதுமட்டுமில்லை, ஒரு அரசு விழாவில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை கூட அமைச்சர் தவறுதலாக சொன்ன விவகாரங்களினால் தமிழக மக்கள் விக்கித்து போய் உள்ளனர்.