யோவ் நீதான் சிக்க வைக்கிற.. முதல்வர் வேட்பாளர் பற்றி இனி வாய்திறக்க மாட்டேன் -திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தாம் இனி வாய் திறக்கப்போவதில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர் ஒருவரை நோக்கி 'யோவ் நீதான் என்னை சிக்க வைக்கப் பார்க்கிற' என அவர் கூறியது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.
தன்னை அமைதியாக இருக்குமாறு கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு
சர்ச்சை நாயகன்
தமிழக அமைச்சர்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். மனதில் தோன்றிய கருத்தை ஒளிவு மறைவின்றி அவர் பேசுவது பல நேரங்களில் அவருக்கே வினையாக வந்து நிற்கும். கடந்த நான்கரை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் வைரலாக வந்துகொண்டிருக்கிறார் இவர்.
கலகல பேச்சு
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், முதலமைச்சர் வேட்பாளர் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவரைப் பார்த்து, 'யோவ் நீதான்யா என்னை சிக்க வைக்கப் பார்க்கிற, நேற்று சிக்க வச்சது போதாதா, இன்றும் சிக்க வைக்க வேண்டுமா' என வினவினார். மேலும், ஆளை விடுங்க சாமி இனி இதைப்பற்றி என்னிடம் கேட்காதீங்க என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
அக்டோபர் 7
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று நேற்று திண்டுக்கல்லில் பேட்டியளித்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ள நிலையில் நீங்கள் ஏன் அது பற்றி பேசுகிறீர்கள் என கேட்டிருக்கிறார். மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சில நாட்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உள்ளூர் பிரச்சனைகள்
இது குறித்து ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன்னை முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது எனக் கட்சி மேலிடம் கூறியுள்ளதாகவும், இனி அதைப் பற்றி வாயே திறக்கப்போவதில்லை என்றும் கூறினார். உள்ளூர் பிரச்சனைகள் பற்றி எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்றும் அதிமுக தலைமை தொடர்பாக யாரும் எதுவும் கேட்க வேண்டாம் எனவும் கெஞ்சியுள்ளார்.