தென்னிந்தியாவில் திண்டுக்கல் தலப்பாகட்டி இனி விஸ்வரூபம்- சிஎக்ஸ் பார்ட்னர் ரூ260 கோடி முதலீடு
திண்டுக்கல்: பிரியாணி வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த சிஎக்ஸ் பார்ட்னர் நிறுவனம் ரூ260 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் மேலும் பல கிளைகளை விரிவுபடுத்த இருக்கிறது.
திண்டுக்கல் பேகம்பூரில் ஆடம்பரம் இல்லாமல் இயங்கிவரும் பெருமாள்நாயுடு பிரியாணி கடைதான் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற பிரியாணி கடையாக இயங்கி வந்தது. காலை உணவுக்கே பிரியாணியை கொடுத்தது பெருமாள்நாயுடு ஹோட்டல்.
இதன்பின்னர் 1957-ல் திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் ஆனந்தவிலாஸ் என்ற சிறிய பிரியாணி கடை திறக்கப்பட்டது. வெளிய இருந்து வெளிச்சம் வராத சிறிய அறையில்தான் இது தொடங்கப்பட்டது.
ம்ம்ம்... பிரியாணி சாப்பிடலாமா பிரண்ட்ஸ்??!
தொடக்க கால தலப்பாகட்டி
2 நீள பெஞ்சுகள், பெஞ்சுக்கு அந்தப்பக்கம் 2 பேர் இந்த பக்கம் 2 பேர் என மொத்தமே ஒரே நேரத்தில் 8 பேர்தான் நெருக்கடியடித்துக் கொண்டு வியர்வைக் குளியலுக்கு நடுவே சாப்பிட முடியும். அதே அறையின் ஒரு மூலையில் இலை எடுத்துப் போடும் தொட்டியும் கை கழுவும் இடமும் இருக்கும். இப்படித்தான் தொடக்க கால ஆனந்தவிலாஸ் தலப்பாகட்டி கடை இருந்தது.
கன்னிவாடு இளம் ஆட்டுக்கறி
வெளியே தேக்சா எனப்படும் மிகப் பெரிய பாத்திரத்தில் ஆவி பறக்க பிரியாணி குவிக்கப்பட்டிருக்கும்.. எப்பொழுதும் கன்னிவாடி சந்தை இளம் ஆட்டுக்கறிதான்.. இப்பொழுது போல் எடுத்த எடுப்பில் அரைபிளேட் என்ற அளவில் அந்த காலத்தில் பரிமாறப்படுவது இல்லை.. கால்பிளேட்டில்தான் தொடங்கும்...
தலப்பாகட்டி பெயர்
மட்டன் சுக்கா, தலைகறி என ஒன்றிரண்டு சைட் டிஸ்கள் மட்டும்தான். தலையில் முண்டாசு கட்டிய பெரியவர் ஒருவர் வெளியே கல்லாவில் அமர்ந்து இருப்பார்.. இதுதான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் திண்டுக்கல் தலப்பாகட்டியின் பூர்வோத்திரம்.
டிரேட் மார்க் ஆனது
பின்னாளில் ஆனந்தவிலாஸை தொடங்கிய பெரியவர் நாகசாமியின் தலப்பாகட்டியிலே இது ‘தலப்பாகட்டி பிரியாணி கடை' என புகழ் அடைந்தது. பின்னர் ‘திண்டுக்கல் தலப்பாகட்டி' என டிரேட் மார்க் ஆகவும் நிலை நிறுத்தப்பட்டது. எத்தனையோ கிளைகள் திறக்கப்பட்ட போதும் அண்மைகாலம் வரை அந்த ஆரம்ப கால ஆனந்தவிலாஸ் கட்டிடத்திலும் பிரியாணி கடை இயங்கி வந்தது. பின்னர்தான் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
முதல் காலாண்டு வருமானம்
தற்போது திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலானது மொத்தம் 64 கிளைகளை கொண்டிருக்கிறது. 7 வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ250 கோடி வருமானம் ஈட்டியுள்ளது தலப்பாகட்டி நிறுவனம். நடப்பாண்டு இறுதியில் இது இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு கிளைகளில் இருந்து மட்டும் ரூ60 கோடி வருவாயை ஈட்டியிருக்கிறது திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல்.
சிஎக்ஸ் பார்ட்னர் முதலீடு
பெரியவர் நாகசாமியின் பேரனான 46 வயது நாகசாமிதான் இப்போது தலப்பாகட்டி ஹோட்டல் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்நிறுவனத்தில் பெங்களூர் சிஎக்ஸ் பார்ட்னர் நிறுவனமானது ரூ260 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
தடுக்கி விழுந்தால் தலப்பாகட்டி
இந்த முதலீட்டின் மூலமாக தென்னிந்திய நகரங்கள் முழுவதும் புதிய கிளைகளை தலப்பாகட்டி ஹோட்டல் திறக்க உள்ளது.அதாவது தென்னிந்திய நகரங்களில் இனி தடுக்கி விழுந்தால் தலப்பாகட்டி ஹோட்டல்தான் என்கிற நிலைமை உருவாகும்.