அய்யோ எம்மா என்னை காப்பாத்துங்க.. தீவைத்துக் கொண்டு கதறிய பெண்.. காதில் வாங்காத மக்கள்
திண்டுக்கல்: ஐயோ என்னை காப்பாற்றுங்கள் என திண்டுக்கல்லில் தீவைத்துக் கொண்ட பெண் அலறும் காட்சிகளும் அதை காதில் வாங்காமல் அவ்வழியே மக்கள் போகும் காட்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் மக்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பன்னைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சதீஷுக்கு அவரது பெற்றோர் இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பெண் தீக்குளிப்பதை தடுக்காமல் வீடியோ எடுத்த கொடூரன்.. தீப்பெட்டி தந்த டீக்கடைக்காரர்.. மனிதம் எங்கே?
மனஉளைச்சல்
இதையறிந்த மாலதி தனது 3 வயது குழந்தையுடன், கணவன் சதீஷ் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டார். அப்போது அவரை சதீஷின் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மாலதி மனஉளைச்சலுடன் அழுதுக் கொண்டே வந்துள்ளார்.
வேண்டாம்
அப்போது அங்கிருந்த டீக்கடையில் குழந்தையை அமர வைத்துவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டார். டீக்கடைக்காரரிடம் தீப்பெட்டியை கேட்ட அந்த பெண் தீக்குச்சியை உரசும் போது அங்கிருப்பவர் ஒருவர் , "வேண்டாம்மா இப்படி செய்யாதே, இப்படியெல்லாம் செய்யக் கூடாதும்மா" என கூறுகிறார்.
காப்பாத்துங்க
அப்போது ஒருவர் டீயை வாங்கிக் கொண்டு அந்த பெண் அருகே கடந்து செல்கிறார். மாலதி அழுதுக் கொண்டே தீயை தனது முந்தானையில் பற்ற வைக்கிறார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீப்பற்றியதால் தாங்க முடியாத அந்த பெண், "அய்யோ எம்மா என்னை காப்பாத்துங்க, என்னை காப்பாத்துங்கன்னு கதறுகிறார்".
வேட்டியால் அணைக்க முயற்சி
அதற்குள் உடல் கருகி கீழே சரிகிறார். அப்போது இருவர் வேட்டியை கொண்டு அணைக்க முயல்கிறார்கள். இன்னொருவர் சாக்கு பை தேடுகிறார். ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல் அவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றும் போதும், தீப்பெட்டி வாங்கிய போதும், தீ வைத்துக் கொண்ட போதும் யாரும் தடுக்கவில்லை.
உடல் கருகிய பெண்
அந்த பெண் கொளுத்த முயற்சித்த போது டீ வாங்கிக் கொண்டு சாவகாசமாக சென்றவர் நினைத்திருந்தால் அந்த பெண்ணிடம் இருந்து தீப்பெட்டியை பறித்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்தார் அவரும் தடுக்கவில்லை. சில வினாடிகளில் அந்த பெண் உடல் கருகி இறந்துவிட்டார். குழந்தையும் ஆதரவற்று போய்விட்டது.
அவசரப்பட்ட மாலதி
மாலதியை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்று அதற்கு 3 வயது வரை தகப்பனாக இருந்துவிட்டு தற்போது திடீரென வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சதீஷின் ஏமாற்றத்தை தாங்க முடியாத மாலதி, குழந்தைக்கு தகப்பன் இல்லாவிட்டாலும் அந்த பிஞ்சுக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருந்திருக்கலாம். சட்டரீதியில் போராடியிருக்கலாம். ஆனால் அவசரப்பட்டுவிட்டார்!