இதுதான் பேச்சுவார்த்தையாம்- திண்டுக்கல்-சிபிஎம், நிலக்கோட்டை-காங்;வேடசந்தூர்-உதயசூரியனில் மதிமுக?
திண்டுக்கல்: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி நிர்வாகிகளே இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தலைமைக்கு சுமூக நிலவரத்தை அனுப்பி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைய உள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் மிகக் குறைந்தது 180 என்கிற எண்ணிக்கையில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது.
அத்துடன் கூட்டணி கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைப்பது எனவும் தீர்மானமாக உள்ளது. திமுக கூட்டணியில் நீடித்தால்தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு கட்சியும் நேக்கு போக்காக காய்களை நகர்த்தி வருகின்றன.
திமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு "இவர்"தான் தாவி வர போறாராமே?
காங்.கூட்டணிகள் நிலை
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுக கொடுக்கிற சீட்டுகளை வாங்கிக் கொண்டு அமைதியாக போவது என முடிவெடுத்திருக்கிறது. இதனால் அந்த கட்சிக்கு அதிகபட்சம் 15 தொகுதிகள் கிடைக்கலாம். இதில் பாதி வெற்றி பெற்றாலே கவுரவம் என்கிறது காங்கிரஸ். இதேபோல் இதர கட்சிகளும் திமுகவுக்கு நெருக்கடி தரவும் விரும்பவில்லை.
மாவட்டங்களில் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தொகுதி பங்கீடு விவகாரங்களில் எந்த சிக்கலும் வரக் கூடாது என்பதற்காக கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடையேயான பேச்சுவார்த்தைகளை முதலில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் முடிவுகளை திமுக கூட்டணி கட்சியினர் தலைமைகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் திமுக அணி
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் தொகுதியை சிபிஎம் கட்சிக்கும் நிலக்கோட்டையை காங்கிரஸுக்கும் வேடசந்தூர் தொகுதியை மதிமுகவுக்கும் ஒதுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். நிலக்கோட்டை தொகுதியில் மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நிற்க விரும்புகிறாராம்.
உதயசூரியன் சின்னத்தில் மதிமுக
திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள் கடந்த காலங்களில் கூட்டணிக்கே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நிலக்கோட்டையை காங்கிரஸ் கேட்பதால் இம்முறை வேடசந்தூர் தொகுதியை மதிமுக கேட்டிருக்கிறதாம். திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது என்பதும் அக்கட்சியின் முடிவாம். வேடசந்தூர் தொகுதியில் பல ஆண்டுகள் கழித்து உதயசூரியன் களமிறங்குவதால் திமுகவினரும் உற்சாகமாக பணிபுரிவார்கள் என்பது இன்னொரு கணக்காம். திண்டுக்கல்லைப் பொறுத்தவரை சிபிஎம் கட்சியில் பாலபாரதி ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்தார். இம்முறை சிபிஎம் தலைமையே முடிவெடுக்க உள்ளதாம்.