மாஜி துணை சபா. காந்திராஜனை முன்வைத்து திண்டுக்கல் திமுக தலைகளின் கேம்-கிறுகிறுக்கும் தொண்டர்கள்
திண்டுக்கல்: முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜனுக்கு சட்டசபை தேர்தல் சீட் கொடுக்கப்படுமா? இல்லையா? என்பதை முன்வைத்து திண்டுக்கல் திமுக தலைவர்கள் நடத்தும் ஆடுபுலி ஆட்டத்தில் அக்கட்சி தொண்டர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. ஒவ்வொருமுறையும் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கே வேடசந்தூர் தொகுதி தாரைவார்க்கப்பட்டுவிடுகிறது. இது திமுக தொண்டர்களை கடுமையாக சோர்வடையவும் செய்திருக்கிறது.
டெல்லிக்கு ராஜாவானாலும் நான் பள்ளிக்கு பிள்ளைதான்- திண்டுக்கல் திமுகவினரை சந்தித்த ஐ.லியோனி குசும்பு
வேடசந்தூர் தொகுதி
கொரோனா லாக்டவுன் காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் வேடசந்தூர் திமுக நிர்வாகிகள் வேடசந்தூர் தொகுதியை இம்முறை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என கெஞ்சி மன்றாடினர். வேடசந்தூர் தொகுதி திமுகவினரைப் பொறுத்தவரையில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் நிறுத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என நம்புகின்றனர். அதிமுக வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே களநிலவரம் அமையும் என்பது வேறு.
திமுகவினர் நம்பிக்கை
ஆனால் காந்திராஜன், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்தான். அவருக்கு அதிமுகவிலும் இன்னமும் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்; திமுக கூட்டணி வாக்குகளும் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் தொகுதியின் பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகர் வாக்குகளும் இருக்கின்றன. இதனால் காந்திராஜனை வேட்பாளராக நிறுத்தினால் திமுகவின் வெற்றி உறுதி என்கின்றனர் அக்கட்சியினர்.
விழிபிதுங்கும் திமுக நிர்வாகிகள்
இதை புரிந்து கொள்ளாமல் வேடசந்தூர் தொகுதியை கூட்டணிக்கு மீண்டும் ஒதுக்கினால் முடிவுகள் நிச்சயம் வேறாகப் போகும் என்பதுதான் திமுகவினரின் கருத்தாக இருக்கிறது. இதனிடையே ஒருவேளை திமுக ஒதுக்கப்பட்டால் கட்சியின் வேட்பாளராக காந்திராஜன் நிறுத்தப்படுவாரா? அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்பு போகுமா? என்பதற்கும் விடைதெரியாமலேயே விக்கித்து நிற்கின்றனர் திமுகவினர்.
காந்திராஜனுக்கு எதிரான உள்ளடி அரசியல்
ஏனெனில் திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் காந்திராஜன் வெற்றி பெற்று தலையெடுத்தால் அவர் தனிசக்தியாக விஸ்வரூபம் எடுத்துவிடுவார். அது தங்களது இருப்புக்குத்தான் உலை என்பதில் உட்கட்சியின் தலைவர்களே உன்னிப்பாக இருக்கின்றனர். இதனால்தான் காந்திராஜனின் ஒவ்வொரு தேர்தல் மூவ்களிலும் வெளிதெரியாத அத்தனை உள்ளடி வேலைகளும் அரங்கேற்றப்பட்டன.
யார் சொல்வது உண்மை?
இந்த முறையும் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.. அவர்தான் முடிவெடுப்பார்.. என ஒருதரப்பும் இன்னொருதரப்பு... மாவட்டத்தில் அவர்தானே மூத்தவர்... அவர்தான் முடிவு சொல்லனும் என்று ஆளாளுக்கு மாறி மாறி கை நீட்டிக் கொண்டே இருக்கின்றனர். இப்படி சொல்வதில் யார் உண்மையை சொல்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்கவும் முடியாத குழப்பத்தில் காந்திராஜனின் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். திமுக முகாமின் இந்த உட்குழப்பத்தை மவுனமாக ரசிக்கின்றது அதிமுக தரப்பு.