மத்திய அரசு அல்ல.. அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம்.. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!
திண்டுக்கல்: அதிமுகவின் பிளவுக்கு திமுகவே காரணம் என்று சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.பி. மாயத்தேவர்(88). இவர் வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் மாயத்தேவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடி கையில் அதிமுக 'கீ’! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட ஓபிஎஸ்! இன்னும் 10 நாட்கள் அமைதியோ அமைதி!
சசிகலா பேட்டி
அதிமுகவின் முதல் எம்.பி-யான மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா திண்டுக்கல் வந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடலுக்கு உருக்கமான அஞ்சலியை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சசிகலா கூறுகையில், அதிமுக சார்பாக இரட்டை இலையை சின்னத்தில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மாயத்தேவர். இவரின் முதல் வெற்றி தான் அதிமுகவின் வெற்றியும். அதை அதிமுக ஒருபோதும் மறக்காது. அவரது குடும்பத்தினரை பார்த்து இதனை கூறினேன்.
அதிமுக எப்போதும் தனி நபரின் கட்சியல்ல. இது மக்களுக்கான கட்சி. தொண்டர்கள் யார் பொதுச்செயலாளர் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் வந்து மரியாதை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டார்.
2024 தேர்தல்
அதிமுகவில் தொண்டர்கள் தான் அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்ய வேண்டும். அந்த தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள். அதுதான் உண்மையான முடிவு. அதனை நோக்கியே அதிமுக செல்லும். வரும் 2024 தேர்தலில், அதிமுகவை வெற்றிபெற செய்வேன். அதனை அனைவரும் பார்க்க போகிறார்கள்.
அனைவரும் இணைவோம்
நான் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் இருந்து சொல்லுவது ஒன்றுதான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் அதிமுகவில் மறைந்த தலைவர்களுக்கு செய்யும் மரியாதை. நிச்சயம் அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரையும் இணைப்பேன்.
திமுகவே காரணம்
அதிமுகவில் 40 ஆண்டுகளாக இருந்துருக்கிறேன். அனைத்து அரசியல் சூழல்களையும் பார்த்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, அதிமுகவை ஒன்றிணைய விடாமல் யாரோ திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதிமுக பிரிந்திருப்பதால் திமுகவுக்கே லாபம். அதனால் இதன் பின்னணியில் திமுகவே இருக்கிறது. இதில் டெல்லியின் பங்கு இல்லை என்று தெரிவித்தார்.