வடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட்- எதிர்க்கும் திமுக- மும்முரமாக ஆதரிக்கும் பாஜக!
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட் உருவாக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் பாஜக உள்ளிட்டவை சிப்காட் அமைவது தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்கிற கருத்தை முன்வைத்து ஆதரிக்கின்றன.
திண்டுக்கல் அருகே வடமதுரையில் வள்ளிசுனை மலைக்குன்று விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. திண்டுக்கல்- கரூர் எல்லையில் உள்ள ரங்கமலையை முன்வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்கனவே உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் திடீரென பெரும் ஓசையுடன் நில அதிர்வுகள் ஏற்படுவதும், நள்ளிரவிலும் வானில் சிறு விமானங்கள் பறப்பதும் ஏன்? எதற்கு? என்பதற்கான விடையே இல்லை. உலகமே லாக்டவுனில் மூழ்கி இருந்தாலும் திண்டுக்கல் வான்பரப்பில் அப்படி என்னதான் பறக்கவிடப்படுகிறது? ரங்கமலையில் புதைந்து கிடக்கும் கனிமவளங்களை வேட்டையாடும் ஆய்வா நடைபெறுகிறது? என்கிற கேள்விகளுக்கு விடை இல்லை.
சட்டசபைத் தேர்தல் வருது...திருச்சி மகளிரணி நிர்வாகிகளை காணொளி மூலம் தேர்வு செய்த கனிமொழி
வெடியோசைக்கு விடை இல்லை
ஒட்டுமொத்த திண்டுக்கல் மாவட்டத்தையே நிலைகுலையவைத்த பெரும் வெடியோசைக்கே பல ஆண்டுகளாக பதில் தரப்படவில்லை. இதனிடையே வடமதுரை வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மலைக்குன்றான வள்ளிசுனையை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருக்கிறது. வள்ளி சுனை மலைக்குன்றானது திருமலைக்கேணி மலைத் தொடரின் ஒருபகுதி.
வள்ளிசுனை மலைக்குன்று
வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கான ஆன்மீக தலமாக இது திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மலைக்குன்றில் அதிகாரிகள் வெவ்வேறு ஆய்வுகளை நடத்தி இருக்கின்றனர். தற்போது இங்கு சிப்காட் வளாகம் அமைக்கப்பட இருப்பதாகவும் இதனால் இந்த மலைக்குன்று தகர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக எதிர்ப்பு- பாஜக ஆதரவு
இதற்கு எதிராக அண்மையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் வள்ளிசுனை குன்றை அழித்து சிப்காட் திட்டத்தை கொண்டுவருவதற்கு வடமதுரை பகுதி பாஜக முழு ஆதரவு தெரிவித்து வருகிறது.
ரூ5000 கோடி வர்த்தகம்-பாஜக
பாஜக தரப்போ இந்த வள்ளிசுனை மலைக்குன்று பகுதியில் சிப்காட் அமைக்கலாம் என தெரிவிக்கின்றன. நத்தம், வடமதுரை எல்லையில் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த திட்டம் பயனைத் தரும் என்பது அவர்களது கருத்து. பாஜக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்களில், இளைஞர்களுக்கு கிடைக்க இருக்கும் வேலை வாய்ப்பை தடுக்கும் தீய சக்திகள்; வடமதுரையில் சிப்காட்.. தடுக்க முயலும் தீய சக்திகள், ரூ5000 கோடிக்கு மேல் வர்த்தக சந்தையாக மாறும் வடமதுரை- தடுக்க முயலும் தீய சக்திகள் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.