மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்.. பழனியில் பொங்கிய எடப்பாடி
திண்டுக்கல்: அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய தனிசொத்தும் அல்ல என்றும், அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பிலேயே இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பின் ஒவ்வொரு நடவடிக்கையுமே தொண்டர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழனியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எடப்பாடி வர்றாரு.. ஒன்றாக களமிறங்கிய திண்டுக்கல்லின் இரு ’தலைகள்’! இவ்வளவு ஏற்பாடுகளா? பரபரத்த பழனி!
அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் திமுக ஆட்சிக்கு கவலை இல்லை. ஸ்டாலினின் அரசு சார்பாக இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நடைபெறக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.
ஸ்டாலின் மக்களை மறந்தால் மக்கள் ஸ்டாலினை மறப்பது உறுதி. மக்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். வாக்களித்த மக்களுக்கு சொத்து வரி, மின்கட்டண உயர்வை திமுக அரசு அன்பளிப்பாக தந்துள்ளது. ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தைக் கேட்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று விமர்சித்தார்
அதிமுகவில் இருந்தபோது பல்வேறு சூழ்நிலைகளில் பொறுப்புகளையும், பதவிகளையும் பெற்று அனுபவித்த ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறி பிடித்து எம்ஜிஆர் வழங்கிய அதிமுக கட்சி அலுவலகத்தை குண்டர்கள் வைத்து தாக்கியுள்ளார். அதிமுக கட்சி அலுவலகம் தனிநபர் சொத்து அல்ல. இது தொண்டர்களின் சொத்து. அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்கள் அமர்ந்த கட்சி அலுவலகத்தை குண்டர்களை வைத்து அடித்து உடைத்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கக்கூடிய கட்சி அலுவலகத்தை, காலால் எட்டி உதைத்தது, ஒன்றரை கோடி தொண்டர்களை நெஞ்சில் காலால் உதைத்ததை போன்ற செயல்.