கொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு!
திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று காலை திடீரென போர் விமானம் பறந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் முயற்சிக்கிறதா? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மத்திய அரசு விவசாய விளைநிலங்களில் கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுத்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே ரங்கமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக மத்திய அரசு கனிம வளம் தொடர்பான தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் மிகமிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விடாமல் டெல்லியில் முகாம்.. அமைச்சர் பதவிக்காக ஓபிஎஸ் தரப்பு தொடர் முயற்சி?
இதனால் ஒட்டுமொத்த திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர அதிர்வுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவே இல்லை. தொடர்ந்தும் திண்டுக்கல் மாவட்ட வான்பரப்பில் திடீர் திடீரென குட்டி ரக விமானங்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை எதற்காக பறக்கின்றன என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் கோடைவாசஸ்தலமான கொடைக்கானலில் இன்று காலை போர் விமானம் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. இதுவரை விமானங்களே பறக்காத இந்த வான்பரப்பில் திடீரென போர் விமானம் பறந்ததாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
எதற்காக திடீரென போர் விமானம் கொடைக்கானலை எட்டிப் பார்த்து செல்கிறது? என்பதற்கான விளக்கத்தை அரசு நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. கொடைக்கானலிலும் நியூட்ரினோ போன்ற ஏதோ ஒருதிட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறதா? அல்லது மாவோயிஸ்டுகளை ஒடுக்க விமானப் படை தளம் ஏதேனும் அமைக்கும் நடவடிக்கைக்கான ஒத்திகையா? என்பது குறித்தும் தெரியவில்லை.
மதிமுக பொதுச்செயலர் வைகோ நேற்றுதான் கொடைக்கானலில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று தொடர்பே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். இப்போது போர் விமானம் அப்பகுதியில் பறந்து சென்றிருக்கிறது.
அதுவும் மத்தியில் பிரதமர் மோடி பதவியேற்ற மறுநாளே போர் விமானம் பறந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் கூட திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்காமல் மவுனமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பாதரச தொழிற்சாலையாலும் முறைப்படுத்தப்படாத கட்டுமானங்களாலும் கொடைக்கானல் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகி வருகிறது. புதிய சாலை வசதிகளை உருவாக்காததால் கொடைக்கானல் நகருக்குள் செல்வதே பெரும்பாடு என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஏதேனும் ஒரு திட்டத்தை திணித்து மக்களை வெளியேற்ற செய்யுமோ? என்பதுதான் கொடைக்கானல்வாசிகளின் கேள்வி.