அது ஏன் கொடைக்கானலுக்கு மட்டும்?.. இதுவரை இப்படி நடந்ததே இல்லையே??
கஜா புயலில் கொடைக்கானல் அதிக பாதிப்படைய என்ன காரணம்?
Recommended Video
கொடைக்கானல்: அது என்ன கொடைக்கானலுக்கு மட்டும் இவ்வளவு புயல் பாதிப்பு? வரலாற்றிலேயே கொடைக்கானல் இப்படி கதிகலங்கி போனதில்லையே? ஏன்?
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி வந்த 'கஜா' ஒரு காட்டு காட்டியதில் மாவட்டமே நிலைகுலைந்து போய்விட்டது. காலையில் 8.30 மணிக்கு அடிக்க ஆரம்பிச்ச பேய்க்காத்து, கிட்டத்தட்ட3 மணி நேரத்துக்கும் அடிச்சிக்கிட்டே இருந்தது.
இந்த 3 மணி நேரம்தான் மிக மிக முக்கியமானது. இதில் பெய்த மழைதான், அடித்த காற்று தான் திண்டுக்கல்லையே உலுக்கியது.
காவு வாங்கிய கஜா
குறிப்பாக புயல் கடந்த அன்றைய தினம் கொடைக்கானலில் 24 மணி நேரமும் மழை பெய்தபடியேதான் இருந்தது. 1,500 கரண்ட் கம்பங்கள் முறிந்து விழுந்தன. 2 ஆயிரத்துக்கும் மேல் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் கரண்ட்டும் போய்விட்டது... போக்குவரத்தும் முடங்கிவிட்டது. இன்னோடு 3 நாளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் கொடைக்கானல் முழுசும் இருட்டுதான். இது போக 5 பேரையும் காவு வாங்கி கஜா இழுத்துகொண்டு போய்விட்டது.
24 நேரமும் மழை
இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் கொடைக்கானலில் மட்டும் இவ்வளவு பாதிப்பு என கொடைக்கானலில் உள்ள மத்திய அரசு வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது அவர்கள் சொல்லும்போது, "கடந்த 15-ந்தேதி இரவு 9 மணி முதல் 16-ந்தேதி இரவு 9 மணி வரை, 24 மணி நேரம் கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
புயலின் மையப்பகுதி
புயல் கடந்து போய்விட்டாலும், 16-ந்தேதி காலை முதல் மதியம் மணி வரை பலத்த காற்று வீசியது. இந்த காற்று வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசியது. இதற்கு காரணம் புயலின் மையப்பகுதி கொடைக்கானல் பகுதியை கடந்து சென்றதுதான்.
24 கிலோ மீட்டர் விட்டம்
இதனால்தான் பலத்த மழையுடன் சேதங்களும் அதிகமாயின. அதனை தொடர்ந்து புயல் வலுவிழந்து அரபிக் கடல் பக்கம் சென்றது. புயல் கடலில் இருந்த போது அதன் விட்டம் 24 கிலோ மீட்டராக இருந்தது. அது, கொடைக்கானல் பகுதிக்கு வந்தபோது மிகவும் குறுகி விட்டது" என்கிறார்கள்.
வடகிழக்கு பருவ மழை
ஆனாலும் கொடைக்கானல் பகுதிக்கு தொடர்ந்து இனிமேல் மழை நீடிக்குமாம். டிசம்பர் வரை நல்ல மழைபெய்யும் என்று சொல்கிறார்கள். ஏனெனில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால்தான் மழை அதிக அளவு பெய்யக்கூடும் என்றும் இன்னும் சொல்லப்போனால் டிசம்பரையும் தாண்டி கூட மழை பெய்யுமாம்.
பீதியில் மக்கள்
அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு இனிமேல் கொடைக்கானலில் இந்தஆண்டு மழை இருக்க போகிறதாம். கஜா பாதிப்பே இன்னும் அடங்காமல் உள்ளது. கரண்ட் போய் 4 நாள் ஆகுது. இதில் இனியும் மழை பத்தின செய்தி கேட்டு கொடைக்கானல் மக்கள் மேலும் பீதியில் உள்ளனர்.