ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நம் நாட்டில் 700-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் இருந்தாலும் மருத்துவ குணங்களில் கொடைக்கானல் மலைப்பூண்டே முதலிடம் வகிக்கிறது.
இதற்கு புவிசார் குறியீடு பெற கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கடந்த 2018-ல் விண்ணப்பித்த போது, 100 ஆண்டுகள் பழமையானதா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் கொடைக்கானல் மலைப்பூண்டு சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்து தாமதிக்காமல் கொடைக்கானல் மலை பூண்டிற்கு உடனடியாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் தனிதன்மையுடன் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கும், அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை பாதுகாக்கவும் புவிசார் குறியீடு சான்று வழங்கப்படும்.
இந்த அடிப்படையில் கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் பூண்டு, சற்று சாம்பல் நிறத்தில் இருக்கும். இது காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் கொண்டது.
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய புவிசார் குறியீடு ஆய்வாளர் உஷா என்பவர் 1837-ம் ஆண்டு கொடைக்கானல் மலை பூண்டு பற்றி பிரிட்டிஷார் எழுதியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது மிகச்சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பதற்கான பல்வேறு தகவல்கள் திரட்டி சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார் .
கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்றாலும், பூண்டு சந்தை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்
புவிசார் குறியீடு கிடைக்க பெற்றிருப்பதால் இனி கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு தனி மவுசு கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.