ஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை
திண்டுக்கல்: தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்டுவதற்காக கால்நடைகளை விற்க சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டு சந்தையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. மாவட்டத்திலேயே இந்த சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சந்தை கூடும். ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம்.
ஒரே மாநிலத்தில் இருந்து இத்தனை அமைச்சர்களா.. மத்திய அமைச்சரவையில் அதிகாரம் செலுத்தும் உ.பி!
அய்யலூர் சந்தை
அய்யலூர் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் முகாமிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
ஏராளமானோர் குவிந்தனர்
சந்தை நடைபெறும் நாளில், அய்யலூர் நகரம் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கும். சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். காலை 5 மணிக்கு விற்பனை தொடங்கி மாலை வரை நடைபெறும். இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக ஆடுகளை விற்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் வாங்குவதற்கு குறைவான ஆட்களே இருந்தனர்.
5,000 ரூபாய்க்கு ஆடு
அதே நேரம், ரம்ஜான் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு கால்நடைகள் ஏராளமாக கொண்டு வரப்பட்டாலும், வழக்கத்தைவிட ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தது. 2,000 முதல் 3,000 வரை விற்கும் ஆடுகள் 5,000 ரூபாய்க்கு மேல் விலையேறியுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
ஒன்றரை கோடிக்கு விற்பனை
வழக்கமாக 50,000 ஆடுகள் கொண்டுவரப்படும் இந்த சந்தையில் இந்த வாரம் 1 லட்சத்திற்கு மேல், ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் சந்தை களைகட்டியது. ஆனால், 4 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை கூடுதலாக இருந்ததால் ஒன்றரை கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனை நடைபெற்றது.
கல்வி கட்டணம்
இதனால், வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் ஆட்டிறைச்சியின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களின பிள்ளைகளுக்கு, கல்வி கட்டணம் கட்டுவதற்காக, ஆடு, கோழிகளை விற்பனை செய்வதற்காக வந்துள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.