ஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்!
பயணி மீது அரசு பஸ் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினார்கள்
Recommended Video
திண்டுக்கல்: ஒரு பயணியை அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் சேர்ந்து கொண்டு ரவுண்டு கட்டி அடிக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த பஸ்ஸின் கண்டக்டர் அதில் ஏறி, டிரஸ் மாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து பயணி கண்டக்டரை கேள்வி எழுப்ப.. இதனால் கண்டக்டர் டென்ஷன் ஆகிவிட்டார்.
அதனால் அந்த பயணியை அடிக்க பாய்ந்துவிட்டார். இதை பார்த்த கண்டக்டருடன் வேலை பார்க்கும் சக டிரைவர்கள், கண்டக்டர்களும் அந்த பயணியை பஸ்ஸை விட்டு கீழே இறக்கி தாறுமாறாக அடித்துள்ளனர். சுற்றிலும் டிரைவர்களும், கண்டக்டர்களும் சூழ்ந்து கொள்ள, எல்லாரிடமும் மாறி மாறி அடி வாங்குகிறார் அந்த பயணி.
ஒரு கட்டத்தில் கீழே மண்ணில் போட்டு புரட்டி புரட்டி அடிக்கிறார்கள். இதில் நிலைகுலைந்து சமாளிக்க முடியாமல் திணறி விழுகிறார் அந்த பயணி. இதனை அந்த பஸ் ஸ்டாண்டில் இருந்த எல்லோருமே வேடிக்கை பார்க்கிறார்கள். ஒருத்தரும் தடுக்கவில்லை.. ஆனால் வீடியோ மட்டும் செல்போனில் எடுத்து வெளியில் விட்டுள்ளனர்.
ஒரு பயணி மீது இத்தனை அரசு பஸ் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஆரம்பத்தில் வாக்குவாதம்தான் நடக்கிறது. கண்டக்டர் ஒருவர் அந்த பயணியை ஓங்கி அடித்த பிறகுதான் அந்த பயணி திரும்பி அடிக்கிறார்.
பயணிகளுக்கு பாதுகாப்பு தருவது டிரைவர், கண்டக்டர்கள் என்று நம்பி கொண்டுள்ளோம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஒருவேளை பயணி மீது தவறே இருந்திருந்தாலும், அவரை போலீசாரிடம் இவர்கள் ஒப்படைத்திருக்கலாம், அதைவிட்டுவிட்டு, அரசு பஸ் ஊழியர்கள் இப்படி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது மிகபெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.