உருகுதே மருகுதே.. உறைஞ்சு போச்சு கொடைக்கானல் ஏரி.. எங்கெங்கும் வெண் பனி!
கொடைக்கானலில் உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொடைக்கானல்: உருகுதே.. மருகுதே.. என்று கொடைக்கானல் சாலைகளில் உருகி ஓடிக் கொண்டிருக்கிறது பனி!! சலசலவென சத்தம் கேட்டு கொண்டிருந்த ஏரிகள் கண்ணாடி போல காட்சி அளித்து கொண்டிருக்கின்றன!!
சென்னை, மதுரை போன்ற இடங்களிலேயே குளிர் வாட்டி வரும்போது, ஊட்டி, கொடைக்கானலை பற்றி கேட்ககே வேண்டாம். இந்த ரெண்டு இடங்களும் குளிரில் நடுங்கி கொண்டிருக்கின்றன.
கடந்த ஒரு வாரமாக மக்கள் யாருமே சரியாக வெளியே வருவதில்லை. வெயில் எப்படா தலைகாட்டும் என்று காத்திருந்து அதற்கு பிறகுமான் மக்கள் நடமாட்டமே துவங்குகிறது.
பஸ் ஓட்ட முடியவில்லை
பகல் நேரத்திலேயே பைக், பஸ் என எல்லா வண்டிகளில் லைட் போட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை நேரங்களில் எதிரில் நிற்கும் ஆட்கள்கூட பனியால் கண்ணுக்கு சரியாக தெரிவதில்லை. பனி காரணமாக டிரைவர்களால் பஸ்ஸை ஓட்டக்கூடிய முடியவில்லை.
உயிர் பிழைத்தார்கள்
நேற்று கூட, மயிலாடும்பாறை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கிவிட்டது. மக்கள் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கடைசியில் ஒரு பாறை மீது பஸ் மோதி நின்றதால், எல்லோருமே உயிர் பிழைத்தார்கள். எனினும் கார், பஸ் கண்ணாடிகளின் கதவுகளையும் இழுத்து மூடிவிட்டு மக்கள் பயணிக்கிறார்கள்.
வளைச்சு வளைச்சு செல்பி
பொதுவாக இந்த சீசனில் ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் குளிருக்கு பயந்து யாரும் சுற்றுலா பயணிகள் வர மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதை ரொம்பவே ரசிக்கிறார்கள். கொடைக்கானல் உறைபனியை வளைச்சு வளைச்சு வீடியோ, செல்பி எடுத்து வருகிறார்கள்.
வெறிச்சோடுகிறது
செடி, கொடிகளில் உள்ள இலைகள் கருக ஆரம்பித்துவிட்டன. பயிர்கள் நாசம் ஆக தொடங்கிவிட்டன. அதிலும் கொடைக்கானலில் போன வருஷம் 7 டிகிரிக்கு வெப்பநிலை இருந்தது. ஆனால் நேற்று 5.8 ஆக இருந்ததாம். அதாவது 10 வருஷத்துக்கு பிறகு இப்படி ஒரு குளிரை கொடைக்கானல் மக்கள் சந்திக்கிறார்களாம். அதனால் பனியும், குளிரும் ரெண்டும் சேர்ந்து ஒட்டுமொத்த மக்களை நடுங்க வைத்துள்ளதுடன், ஊரே வெறிச்சென்று காணப்படுகிறது.
ஏரிகள் உறைந்தன
உறைபனி காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, கீழ் பூமி, ஜிம்கானா போன்ற பகுதிகளில், நீர் உறைந்து போய் காட்சி அளிக்கிறது. பனி அதிகமாக கொட்டி வருவதால், பசுமை போர்த்திய புல்வெளிகள் வெண்ணிற ஆடையை போர்த்தி உள்ளது போல் உள்ளது. காற்றில் அசைந்தாடி சலசலக்கும் ஏரிகளில் உள்ள நீர் இப்போது கண்ணாடி போல காட்சியளிக்கிறது. ஏரிகளில் மட்டுமல்ல, வீட்டுக்கு வெளியே பக்கெட்டில் தண்ணீர் வைத்தாலும் அது உறைந்து போய் கெட்டித்தன்மையுடன்தான் இருக்கிறது.