திண்டுக்கல் அதிமுகவில் வாரிசுகள் பராக்... பராக்... வலுவான பேஸ்மெண்ட் போட்டு வைத்திருக்கும் தந்தைகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அதிமுகவின் முகங்களாக அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ்மோகன், முன்னாள் மேயர் மருதராஜ் மகன் வீரமார்பன் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் மிகவும் சீனியர் திண்டுக்கல் சீனிவாசன். அவருடன் இணைந்து செயல்பட்டு வந்த நத்தம் விஸ்வநாதன் பின்னாளில் அமைச்சராக விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
அதிமுகவின் எம்பியாக, பொருளாளராகவும் பதவி வகித்த சீனிவாசனை, நத்தம் விஸ்வநாதன் தாம் கோலோச்சிய காலத்தில் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் காலமும் காட்சிகளும் மாறின.
கடன் கொடுத்தால் குண்டர்களுடன் சென்று மிரட்டுவீர்களா...? ஆக்சிஸ் வங்கி மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
செல்வாக்கை இழந்த நத்தம்
2016 தேர்தலின் போது ஜெயலலிதாவாலேயே நத்தம் விஸ்வநாதன் டம்மியாக்கப்பட்டார். அவர் மீதான கடும் கோபத்தால் சொந்த தொகுதியைவிட்டு ஆத்தூர் தொகுதியில் போய் போட்டியிடுங்கள் என அனுப்பி வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் அணிக்கு போனார் நத்தம். அதிமுக அணிகள் இணைந்த போதும் நத்தத்தின் செல்வாக்கு திரும்பவே இல்லை.
அதிமுகவின் முகங்கள்
திண்டுக்கல் அதிமுகவைப் பொறுத்தவரையில் இப்போது இருவர்தான் அத்தனையும். தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் முன்னாள் மேயரும் அதிமுக மாவட்ட செயலாளருமான மருதராஜ்.. இந்த இருவரும்தான் ஒட்டுமொத்தமாக திண்டுக்கல் அதிமுகவின் முகங்கள். இவர்களது வாரிசுகள்தான் இனி அதிமுகவின் திண்டுக்கல் முகங்கள் என்கிற நிலை படிப்படியாக உருவாகி உள்ளது.
களத்தில் வாரிசுகள்
சீனிவாசன் மகன்களில் ஒருவரான சி.எஸ். ராஜமோகனுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பதவி... மருதராஜ் மகன் வீரமார்பன் என்ற பிரேமுக்கு திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பதவி... கொரோனா காலத்தில் சீனிவாசனும் மருதராஜனும் பங்கேற்ற பல்வேறு நிவாரணப் பணிகளில் ராஜ்மோகனும் பிரேமும்தான் முன்னிறுத்தப்பட்டனர்; அவர்கள் ஏற்பாடுகளில்தான் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் முகமாக எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர் மறைந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியன். அவரது மகன் இப்போது வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம். பரமசிவம்தான் அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளராகவும் இருக்கிறார்.
தலைவர்களிடையே இணக்கம்
பொதுவாக மாவட்டங்களில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு தலையும் ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் விசித்திரமாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் இருவரும் கைகோர்த்தபடி பயணிக்கிறார்கள்.. இவர்களது இணக்கத்தால் நத்தம் விஸ்வநாதன் தரப்பு என்கிற ஒன்றே இல்லாமலேயே போய்விட்டது.
உட்கட்சி பூசல் இருக்கு.. ஆனா இல்லை
அதேநேரத்திலும் அதிமுகவிலும் உட்கட்சி பூசல் இல்லாமல் இல்லை.. கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் போது இந்த உட்கட்சி பூசல் காணாமலேயே போகும்.. அதுவரை காத்திருப்போம் என்கின்ற சில அதிருப்தி குரல்களும் எழாமல் இல்லை என்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.