தனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்
திண்டுக்கல்: காளிகாம்பட்டி விஜய் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 வாரத்தில் எம்பிஏ படிப்பில் 120 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் காளிகாம்பட்டி விஜய் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி முதல்வர் ஸ்வர்ணலத, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்று கடந்த பத்து ஆண்டுகளாக பிபிஏ எம்பிஏ படிப்பு நடத்தி வருகிறோம். இப்படிப்புக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு கல்வி ஆண்டும் நீட்டிப்பு பெற வேண்டும்.
இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் போது, பல்கலைக்குழு கல்லூரியில் ஆய்வு செய்யும். அவர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை சரி செய்து அறிக்கை அளித்தால் அனுமதி வழங்கப்படும். 2019- 2020 கல்வி ஆண்டிற்கு எம்பிஏ படிப்பில் 120 மாணவர்களை சேர்க்க அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தோம்.
கல்லூரியில் ஆய்வு நடத்தி குழு 3 குறைபாடுகளை தெரிவித்தது. அந்த குறைபாடுகளை சரி செய்து அறிக்கை அளித்தோம். அதையேற்காமல் எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்து பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி சுரேஷ்குமார், "அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்த குறைபாடுகளில் வகுப்பறை தொடர்பானது சரி செய்யப்பட்டதை பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது. நூலக குறைபாடு சரி செய்யப்பட்டதை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. புத்தகம் வாங்கியதற்கான ரசீது முறைப்படி சமர்பிக்கவில்லை என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் புத்தகம் வாங்கியதற்கான ரசீதை சமர்ப்பிக்க முறையாக படிவம் எதுவும் இல்லை என பல்கலைக்கழக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது கல்லூரி நூலகத்தில் 3134 புத்தகம் இருந்துள்ளது. ஆனால் 1080 புத்தகம் இருந்தாலே போதுமானது. ஆனால் 3 மடங்கு கூடுதல் புத்தகம் இருந்துள்ளது. இருப்பினும் 10 புத்தகம் குறைவாக இருப்பதாக கூறி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 3134 புத்தகம் வாங்கியவர்களுக்கு 10 புத்தகம் வாங்குவது பெரிய விஷயமல்ல. இதனால் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 வாரத்தில் எம்பிஏ படிப்பில் 120 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.