திமுக கொ.ப.செ. திண்டுக்கல் லியோனி ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு- ஐ.பெரியசாமி படம் இல்லாததால் ஆத்திரம்!
திண்டுக்கல்: திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.லியோனி ஒட்டிய நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளன. திமுக துணை பொதுச்செயலாளர் ஐ பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐபி செந்தில்குமார் படங்கள் இல்லாமல் லியோனி போஸ்டர்கள் ஒட்டியதால்தான் இந்த பஞ்சாயத்து வெடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ. பெரியசாமியும் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமாரும்தான் முகங்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை மீறி ஒருசக்தி திண்டுக்கல் மாவட்ட திமுகவில் இதுவரை தலையெடுக்கவிடவில்லை.
கொரோனாவை விட திமுகவை பார்த்து அரசு அஞ்சுகிறது - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
ஐ.பி. மாநில பதவி
இதனாலேயே திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு - மேற்கு என பிரிக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணி மேற்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் ஐ.பெரியசாமி ஏற்கனவே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்கிற மாநில பதவியில் இருந்து வருகிறார்.
திண்டுக்கல் லியோனி கொ.ப.செ.
இப்போது திண்டுக்கல் ஐ. லியோனி அதேபோல மாநில பதவியான கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.லியோனி சுவரொட்டிகளை ஒட்டி இருக்கிறார். இந்த சுவரொட்டிகளில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி படங்கள் இடம்பெற்றிருந்தன.
லியோனி போஸ்டர்கள் கிழிப்பு
ஆனால் மாவட்டத்தைச் சேர்ந்த துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் ஐபி செந்தில்குமார், அர. சக்கரபாணி ஆகியோர் படங்கள் இதில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள் லியோனி ஒட்டிய போஸ்டர்களில், லியோனி படத்தை கிழித்து எறிந்து ஆவேசத்தைக் காட்டினர்.
லியோனிக்கு எதிராக ஆவேசம்
அத்துடன் சமூக வலைதளங்களிலும் லியோனியை திண்டுக்கல் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். Ganesan Sawadamuthu என்ற திமுக பிரமுகர் தமது முக நூல் பக்கத்தில், லியோனி அவர்களே உனக்கு கழக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கி இன்று காலை தானே முரசொலியில் வந்தது ஆனால் முன்பே போஸ்டர் தயாரித்து வைத்து விட்டீர்களோ உனது பெயருக்கு முன் திண்டுக்கல் என்று போட்டு கொள்கிறாயே அந்த மாவட்டத்தில் கட்சியை அனு அனுவாக வளர்க்க மாண்புமிகு கழக துணை பொது செயலாளர் அய்யா ஐபியார் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது உனக்கு தெரியுமா, அவரது படம் போட தெரியாது,மாவட்ட கழக செயலாளர் படம் போட தெரியாது ஆனா உன் மண்டையை பெரிசா போட்டு திண்டுக்கல் நகரில் ஒட்டினா தொண்டன் விட்டுவிடுவானா என ஆவேசப்பட்டுள்ள்ளார்.
லியோனிக்கு எச்சரிக்கை
மேலும் இது ஐபியார் மாவட்டம் இங்கே உன் பட்டிமன்ற குசும்பை காட்டினா உதை தான் விழும் கழக வளர்ச்சிக்கு உன் பணி என்ன பங்கு என்ன மேடைகளில் பேசுவதற்கு சினிமா நட்சத்திரங்களை விட அதிகமாக பணம் பெற்று கொண்டு தானே பேசுற அதுவும் உன் செட்டப்புக்கு தனி கவர் வேண்டுமென்று வேறு அடம்பிடித்து பெற்று கொள்கிறாய் எதோ மேடைகளில் நாய் கத்தா கத்துறனு ஒரு பதவி கொடுத்தா உடனே ஆணவம் வந்து விடுகிறதே எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று மழுப்ப வேண்டாம் உடனடியாக சிங்கத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரவில்லை என்றால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் தவறான போஸ்டரை அப்புறபடுத்திய மாணவர் அணி சகோதரர்களுக்கு வாழ்த்துகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.