#JusticeForKalaivani சிறுமி கலைவாணியின் படுகொலைக்கு நீதி வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் கலைவாணி என்ற சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது
திண்டுக்கல்: சிறுமி கலைவாணியின் படுகொலைக்கு நீதி கேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் இன்று அறவழிப் போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி தம்பதியரின் மகள் கலைவாணி. கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கமடைந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ளார். இதைக் கொலையாளியே காவல்துறையில் ஒப்புக்கொண்டுள்ளான்.
வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 29 வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டான்.
இந்த தீர்ப்பு கலைவாணியின் பெற்றோர்கள், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கின்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தல்.
சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள சலூன் கடைகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #JusticeForKalaivani என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுமியின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் கலைவாணி என்ற நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து 19 வயது குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.#JusticeForKalaivani
— Dr S RAMADOSS (@drramadoss) October 9, 2020
ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் கலைவாணி என்ற நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து 19 வயது குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கலைவாணியின் படுகொலைக்கு நீதி கேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் இன்று அறவழிப் போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!#JusticeForKalaivani
— Dr S RAMADOSS (@drramadoss) October 9, 2020
கலைவாணியின் படுகொலைக்கு நீதி கேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் இன்று அறவழிப் போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.