தமிழகத்தில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் இல்லை- விஸ்வரூபம் எடுக்க வைக்கின்றனர்- கமல்ஹாசன் கண்டனம்
திண்டுக்கல்: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதற்கு அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதேபோல் தமிழகம், புதுவையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு இந்த டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மநீமவுக்கு புதுவையில் பேட்டரி டார்ச் சின்னம் -தமிழகத்தில் சின்னம் ஒதுக்கப்படவில்லை!
திண்டுக்கல் சரித்திரம்
தமிழகத்தில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்காததற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சியினருடனான கலந்துரையாடலில் கமல்ஹாசன் பேசியதாவது: இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கான முதல் சிப்பாய் கலகம் 1857-ல் நடைபெற்றது என்கிறது சரித்திரம். ஆனால் சரித்திரம் மறைக்கப்பட்டிருக்கிறது. 1757-ல் மதுரையில் கான்சாகிபு மருதநாயகம் போராடினார். அவரைத் தொடர்ந்து திப்புசுல்தான் இந்த திண்டுக்கல் மண்ணில் இருந்து போராடினார். திப்பு சுல்தான், வேலுநாச்சியார் போன்றவர்கள் போட்ட விதை மெதுவாக வளர்ந்து அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம். இது திண்டுக்கல்லின் பழைய கதை.
பாதுகாக்க வேண்டும்
திண்டுக்கல் மீண்டும் அதேபோல ஒரு புரட்சியை உருவாக்க முடியும். சுதந்திரம் என்பதும் ஜனநாயகம் என்பதும் அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. நம் உடல் ஆரோக்கியம் போல அவற்றையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கயவர்களுக்கு வலிக்கும்
இந்திய ஜனநாயகம் இன்று நோய்வாய்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. எங்கள் கட்சியில் நிறைய டாக்டர்கள் இருக்கின்றனர். நானும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். என்னுடைய ஊசி நல்லவர்களுக்கு வலிக்காது; கயவர்களுக்கு வலிக்கும்.
சின்னம் மறுப்பு
கத்தியின்றி, ரத்தமின்றி துப்பாக்கி ஏந்தி பெரும் புரட்சியை உருவாக்க முடியும். நீங்கள் இயக்கும் கருவியாக நான் இருக்க விரும்புகிறேன். இந்த அரங்கம் முழுவதும் தலைகளைப் பார்க்கவில்லை. தலைவர்களைப் பார்க்கிறேன். நமக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபமாக்குகின்றனர்
ஆட்சியில் நாம் பல மாற்றங்கள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறோம். டார்ச் லைட் இல்லை எனில் கலங்கரை விளக்கம் கேட்போம். எங்களுடைய சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக்க எண்ணுகின்றனர். எதிர் அணியில் பலமான அடி வாங்கப் போகிறார்கள். வெற்றிக்கான பாதை கண்முன்னே தெரிகிறது. ஏழைகளுக்கு வாக்குக்கு ரூ5,000 பணம் தருகிறார்கள் எனில் உங்களது பணத்தை எடுத்து உங்களுக்கு தருகிறார்கள்.
|
அடிமாட்டு விலைக்கு விற்பனை
உங்களையே நீங்க அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என சேரவேண்டியதும் இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் 5 லட்சம், 50 லட்சம் என உங்களுக்கு சேரவேண்டியதும் இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
நம்மவர்கள் திருக்கூட்டம்
இதனிடையே தமது ட்விட்டர் பக்கத்தில், நாக்கை மட்டுமே நம்புவோருக்கெதிராக வாக்கை வைத்திருப்போர் வரிசை ஜொலிக்கிறது. ஓட்டுப் பெட்டியில் தீர்ப்பை எழுதும் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பார்க்கிறேன். செல்லும் வழியெங்கும் மக்களின் பெருங்கூட்டம். வெல்லப்போகிறது நம்மவர்கள் திருக்கூட்டம். #எதுவும்_தடையல்ல என பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்