கந்த சஷ்டி விழா.. பழனி.. திருப்பரங்குன்றம்.. முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்
பழனி: பழனி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெறுகிறது.
பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 2) நடைபெறுகிறது.
சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கே சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது.
மதியம் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்பின்பு சன்னதி நடை அடைக்கப்படும்.
நாளை மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 28ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதேபோல்த திருச்செநதூரில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.