திண்டுக்கல்: பாலைவனமான குடகனாறு ஆற்றில் நீர் திறக்க கோரி நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடகனாறு நதிநீர் பிரச்சனைக்காக சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாறு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆறு ஆத்தூர் தாலுகா மல்லையபுரம், வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர் உட்பட 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வேடசந்தூர் அழகாபுரி அணையை அடைகிறது. அங்கிருந்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது குடகனாறு ஆறு.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பல ஆண்டுகளாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
நரசிங்கபுரம் ராஜவாய்க்கால்
110 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ஆற்றின் மேல்பகுதியில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பு அணையால் குடகனாற்றுக்கான நீர்வரத்து நின்று போனது.
பாலைவனமான குடகனாறு
ஆகையால் குடகனாறு குறுக்கே கட்டப்பட்ட நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தடுப்பணையை அகற்ற வேண்டும் என்பது இந்த ஆற்றை நம்பிய பாசன பகுதி மக்களின் கோரிக்கை. இந்த தடுப்பணையால் குடகனாற்றின் முகத்துவாரத்தில் இருந்து காமராசர் நீர்த்தேக்கம் உபரி நீர் வெளியேறும் இடம் வரை ஆற்றின் வழித்தடமே காணாமல் போய்விட்டது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக வெள்ள காலங்களில் கூட குடகனாறு ஆறு பாலைவனமாகவே காட்சி அளிக்கிறது.
தொடர் போராட்டங்கள்
குடகனாறு ஆற்று நீரை நம்பிய விவசாயம் பொய்த்து போய்விட்டது. இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக அரசிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல், வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு என பல போராட்டங்கள் நடத்தப்படும் பயன் ஏதும் ஏற்படவில்லை.
சாலை மறியல்- தடியடி
இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பேகம்பூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.