வேதாரண்யத்திலிருந்து இத்தனை கி.மீ பயணித்து மலையேறி தாக்கிய கஜா.. மலைத்துபோயுள்ள கொடைக்கானல்
Recommended Video
கொடைக்கானல்: கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால், கொடைக்கானல் மேகமலை பகுதியில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.
கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தபோது, அங்கேயிருந்து சுமார் 320 கி.மீ தொலைவிலுள்ள கொடைக்கானலில் யாருமே அந்த புயல் தங்களையும் துவம்சம் செய்ய வரப்போகிறது என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
[முத்துப்பேட்டைக்கு இந்த உதவிகள் தேவை.. உதவிக்கரம் நீட்டலாமே ]
ஆனால், அன்று மதியமே, புயல், கொடைக்கானல் மலை மீது ஏறிச் சென்றபோதுதான், அதன் கொடூரத்தை மக்கள் உணர்ந்தனர்.
மணிக்கு 60 கி.மீ வேகத்திற்கும் மேல் வீசிய காற்று, கொடைக்கானலில் பல உயர்ந்த மரங்களை உருக்குலைத்தது. 14 செமீ மழை கொட்டியது. மேகமலையில் சுமார் 50 வீடுகளை புயல் காற்று, துவம்சம் செய்தது. நிலச்சரிவு ஏற்பட்டது, காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
சேதமான வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், மேகமலையில் பலருக்கும் பட்டா இல்லாததனால் நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் உள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், "இதுவரை இதுபோன்ற ஒரு மழையும் பெய்தது இல்லை, இப்படி ஒரு காற்று வீசியதும் கிடையாது. நாங்கள் இப்படியொரு காற்று, மழையை பார்த்ததே கிடையாது. வீடுகள் சுத்தமாக போய்விட்டது" என்றார்.
மழையின் காரணமாக, கொடைக்கானல் மலையில், பயிரிடப்பட்ட காய்கறிகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.