தள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச்
Recommended Video
திண்டுக்கல்: கையில சாப்பாடு தட்டு வைத்து கொண்டு பந்தியில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறி கொண்டிருக்கிறார் மன்சூரலிகான்!
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ள மன்சூரலிகான் கிட்டத்தட்ட ஜெயித்தே விடுவார் போல இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களிடம் நெருங்கி பழகி வருகிறார்.
ஓட்டுக்காக இப்படி வேஷம் போடுகிறார் என்று பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு, பெயருக்கு ஒரு விமர்சனத்தை முன் வைத்துவிட்டு போனாலும், இதைக்கூட மற்றவர்கள் செய்யவில்லையே என்றுதான் கேட்க தோன்றுகிறது!
வேலாயுதம்பாளையம்
எந்த வீட்டில் விசேஷம் ஆனாலும் சரி, துக்கம் ஆனாலும் சரி.. அங்கே மன்சூர் ஆஜராகி விடுகிறார். நேற்றுகூட வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. அடுத்த செகண்ட் உள்ளே ஆஜராகிவிட்டார் மன்சூர்!
வளைகாப்பு
வளைகாப்பு நடந்த பெண்ணுக்கு ஆசீர்வாதம் செய்தார். வந்தோமா, வாழ்த்தினோமா என்றில்லாமல் பந்தி நடக்கிற இடத்துக்கு சென்று விட்டார். கையில் சாப்பாட்டை எடுத்து கொண்டு பந்தியில் இருந்த எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டே வந்தார். சீமந்த விழா என்பதால் கலவை சாதம் தயார் செய்யப்பட்டிருந்தது. தினுசு தினுசான சாப்பாட்டை பரிமாறியதும் வந்திருந்த விருந்தாளிகளுக்கு குஷியாகி விட்டது.
துக்க வீடு
பிறகு கடைசியாக, தட்டில் கலவை சாப்பாட்டை போட்டுக் கொண்டு மன்சூர் சாப்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். வரும்வழியில் ஒரு துக்க வீடு! அந்தவீட்டின் நபர் மரணமடைந்து, உடல் வீட்டினுள் கிடத்தப்பட்டுள்ளது. விசேஷ வீட்டுக்கே கூப்பிடாமல் சென்றவர், எழவு வீட்டுக்கு போகாமல் இருப்பாரா என்ன? இறந்தவருக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வீட்டின் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
|
ஓட்டை போட்டுடுவேன்
பின்னர் அங்கிருந்து கிளம்பி வேறு இடத்துக்கு சென்றார். அங்கே இஸ்திரி போடுவர் கடைக்குள் சென்று, நான் அயர்ன் பண்ணுகிறேன் என்று சொன்னார். ஒரு துணியை எடுத்து இஸ்திரிபோட்டு கொண்டே இருந்தவர், "எனக்கு ஓட்டு போடலைன்னு வெச்சுக்குங்க.. இந்த துணியில ஓட்டை போட்டுடுவேன்" என்று செல்லமாக மிரட்ட, அந்த கடைக்காரரோ சிரித்துவிட்டார்.
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2019 |
பரோட்டா
இதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டது. ஓட்டல் கடைகளில் பரோட்டா போடுவது ஆரம்பமானதும் கடைக்குள் சென்று மாவை எடுத்தார். அவ்வளவுதான்.. அதற்குமேல் யாரை பிசைந்து எடுத்து கொத்து பரோட்டா போட்டார் என தெரியவில்லை! இப்படியே திண்டுக்கல் தினந்தோறும் களை கட்டி வருகிறது.