புதுப்பட அறிவிப்பு ஏதாச்சும் இருக்கும்.. அதான் அரசியல் பேசுறார்.. ரஜினி மீது மன்சூர் அலிகான் தாக்கு
சின்னாளப்பட்டி: புதிய பட அறிவிப்பின் போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். மற்றபடி நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என நடிகரும் திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான மன்சூர் அலிகான் விமர்சனம் செய்தார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தனக்கே உரிதான பாணியில் பிரசாரம் செய்து வருகிறார்.
மீன் வெட்டி கொடுப்பது, காய் , கீரை விற்பது, ஷூ பாலிஷ் போட்டு தருவது, முதியவர்களுக்கு உதவுவது என பல்வேறு விஷயங்களை செய்து மக்களோடு மக்களாக பழகி வருகிறார். அது போல் கூழை விற்பனை செய்த மன்சூர் அலிகான் அதை குடித்து மகிழ்ந்தார்.
அணை கட்டினா ஆறு செத்துடும்.. சீமான்.. திண்டுக்கல்லில் அணை கட்டுவேன்.. இது மன்சூர் அலிகான்!
பிரசாரம்
இது மட்டுமல்லாது பரோட்டா செய்வது, டீ ஆத்துவது, வடை சுடுவது, தெருக்களை சுத்தம் செய்து குப்பைகளை அள்ளுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என தனது வித்தியாசமான பிரசாரத்தை முன்னிறுத்தியுள்ளார்.
அணை கட்டுதல்
பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் ஆடம்பரம் இல்லாமல் விவசாயி போல் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு வந்தார். அப்போது மன்சூர் பேசுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. என்னை எம்பியாக தேர்வு செய்தால் செந்துறை, குடகனாறு ஆகிய பகுதியில் அணைகளை கட்டி குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பேன்.
அடிப்படை வசதிகள்
நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் உங்களில் ஒருவனாக இருப்பேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
புதுப்பட வெளியீடு
புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன்பிற்பாடு அவர் அமைதியாகிவிடுவார். மீண்டும் அடுத்த படம் வெளியாகும் வேளையில் மற்றொரு அறிக்கை வெளியிடுவார். இதுதான் ரஜினியின் வேலை. இதுவரை மக்களுக்கு எந்த நன்மையையும் அவர் செய்தது கிடையாது என மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார்.