ஏன் தம்பி நான் தான் கிடைத்தேனா... ஆளை விடுங்க சாமி! -திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதற்கெல்லாம் நான் தான் கிடைத்தேனா தம்பி, ஆளை விடுங்க என ஓட்டம் பிடித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
இமையையும், விழியையும் பிரித்துபார்க்க முடியாது என்பது போல், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது எனக் கூறலாம். அந்தளவிற்கு அவர் வாயை திறந்தாலே சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்ட அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சீனிவாசனுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்து எம்.எல்.வாக வெற்றிபெற வைத்து அமைச்சராகவும் ஆக்கினார். அதுவும் நத்தம் விஸ்வநாதன் மீதிருந்த கோபம் காரணமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு மறுவாழ்வு கொடுத்தார்.
நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் ஆகியோர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடியவர்கள். திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் நத்தம் விஸ்வநாதன் கோஷ்டி, திண்டுக்கல் சீனிவாசன் கோஷ்டி என இரண்டு அணிகள் உள்ளன. திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது, அங்கு வாய் தவறி பேசுவதையும், வேடிக்கையாக பேசுவதையும் சமூக வலைதளங்களில் உலவ விட்டு அமைச்சரின் இமேஜை சரியவைக்கும் பணிகளை அவரது எதிர்தரப்பினர் பக்காவாக செய்து வருகின்றனர்.
14 நாய்களை வளர்த்த ஜெயலலிதா.. ஜூலி இறந்தபோது என்ன ஆச்சு தெரியுமா? ஜெ. மறுபக்கம்.. மனம் திறந்த ஓபிஎஸ்
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றிவிட வைத்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதையடுத்து முதல்வர் தரப்பில் இருந்து கடுமையாக கடிந்துகொண்ட பின்னர் அந்த சிறுவன் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சீனிவாசன். இன்னும் அந்த விவகாரத்தை பழங்குடியின சங்கத்தினர் விடுவதாக இல்லை. அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விலகாத நிலையில், அவரை செய்தியாளர்கள் ரவுண்டு கட்டி முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக போராட்டம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, ''ஏம்பா தம்பி உனக்கு நான் தான் கிடைத்தேனா, இதற்கெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுப்பார், என்னை விடுங்கப்பா'' என ஓட்டம் பிடித்தார். அப்போதும் அவரை செய்தியாளர்கள் விடுவதாக இல்லை, துரத்திச்சென்றனர். ''ஆளாளுக்கு கருத்துக் கூற வேண்டாம்னு முதல்வர் சொல்லியிருக்கார்'' இல்லையென்றால் நான் பேசுவேன் எனத் தெரிவித்து விருட்டென நடையை கட்டினார்.