சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர்தானே நீங்க.. எடப்பாடி மீது ஸ்டாலின் அட்டாக்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் சரமாரியாக விமர்சித்தார்.
நிலக்கோட்டை: ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அதிகாரத்தை பயன்படுத்தி 18 எம்எல்ஏக்களின் பதவியை பறித்து அவர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், ஓசூர் தொகுதியை காலி தொகுதி என இன்னும் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருகிறதா அல்லது மீண்டும் 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வர உள்ளதா என்பது தெரியவில்லை.
கொடநாடு கொலை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை தருகிறார். திட்டப்பணிகளுக்கு லஞ்சம், குட்கா ஊழல் என தொடர்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அந்த கொலையை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன.
தவழ்ந்து சென்றார்
ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர் பழனிசாமி, விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்" என்றார்.
நடத்தியது இல்லை
தொடர்ந்து பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போதும், "தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, இந்தியாவில் மட்டும் இல்லை, வேற எங்கியுமே இது மாதிரியான கிராம சபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயன்படக்கூடிய, பயனளிக்கக்கூடிய வகையில் இப்படி ஒரு கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது.
2 ஆயிரம் ரூபாய்
5 வருட ஆட்சி முடிய போற நேரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என மாறி, மாறி அறிவிக்கிறார்கள். வெறும் ஓட்டுக்காகத்தான் இதெல்லாம். கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசிய தேவையாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்" என்றார்.