சந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு
Recommended Video
பழனி: தெலங்கானா முதல்வா் சந்திரசேகரராவை சந்தித்திருப்பது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு மாநிலக் கட்சித் தலைவா்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் கேரளா முதல்வா் பினராயி விஜயனை கடந்த சில தினங்களுக்கு முன்னா் சந்தித்த சந்திரசேகர் ராவ், நேற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
மூன்றாவது அணி
ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக திமுக கூறி வருகிறது. இந்தநிலையில், மூன்றாவது அணிக்காக செயல்பட்டுவரும் சந்திரசேகர ராவ் உடனான ஸ்டாலினின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
தோல்வி பயம்
இந்தநிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜியிடம் தேர்தலுக்குப் பின் முடிவைக் கூறுவதாகத் தெரிவித்ததாகவும், தற்போது சந்திரசேகர ராவை சந்தித்திருப்பது தோல்வி பயத்தைக் காட்டுவதாகவும் கூறினார்.
கூட்டணி தொடரும்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, சட்டப்பேரவையில் 88 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு தமிழகத்தின் நலனுக்காக ஸ்டாலின் சிறு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்று விமர்சனம் செய்தார்.
வெறுப்பில் மக்கள்
திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு நனவாக போவது இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, அவர் எங்களை பற்றி திட்டியும், குறைகூறியும் தான் வாக்கு சேகரிக்கிறார். மக்களுக்கான வளர்ச்சி பற்றி அவர் பேசவில்லை. மு.க. ஸ்டாலின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்றும் கூறினார்.