நத்தத்தில் நங்கூரமிட்டுள்ள நத்தம் விஸ்வநாதன்... பணமழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர்..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியிலிருந்து வரும் தேர்தலில் எம்.எல்.ஏ.ஆகியே தீருவது என்ற லட்சியத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் நத்தம் விஸ்வநாதன்.
முன்னாள் அமைச்சரான இவர் 2011-2016 காலக்கட்டத்தில் நால்வர் அணியில் இடம்பெற்று அதிமுகவில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தவர்.
கடந்த தேர்தலில் இவருக்கு நத்தம் தொகுதியில் சீட் கொடுக்க மறுத்த ஜெயலலிதா திமுகவின் ஐ.பெரியசாமியை வீழ்த்துவதற்காக ஆத்தூருக்கு தூக்கி அடித்தார். ஆனால் அங்கும் அவர் தோல்வியை தழுவியது தனிக்கதை.
ஜோ பிடன், கமலா ஹாரிஸ்க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் வாழ்த்து
தேர்தல் பணி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார் மண்ணின் மைந்தரான நத்தம் விஸ்வநாதன். வரும் தேர்தலில் நத்தம் விஸ்வநாதனுக்கு போட்டியாக சீட் கேட்க அதிமுகவில் ஆளில்லை. நத்தம் ஒன்றியச் செயலாளராக இருந்த ஷாஜகான் ஜெயலலிதாவாலேயே நேரடியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கானவர். இவர் நத்தம் விஸ்வநாதனுக்கு போட்டியாக சீட் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அண்மையில் காலமாகிவிட்டார்.
ரூட் கிளியர்
இதனால் தனக்கு ரூட் கிளியராகிவிட்டதாக கருத்தும் நத்தம் விஸ்வநாதன் இப்போதே நத்தம் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். வைட்டனின் 'ப' -வை தொகுதி முழுவதும் இறக்கவுள்ளார். இந்த விவகாரங்களை அவரது மகன் அமர்நாத்தும், மைத்துனர் கண்ணனும் கவனித்துக் கொள்ள உள்ளார்கள். இதனால் உள்ளூர் அதிமுகவினர் பணமழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கின்றனர்.
மீண்டும் விஜயன்
தற்போது நத்தம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆண்டி அம்பலம். இவரது தந்தை காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இரண்டு தலைமுறைகளாக அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்தும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை. இதனால் மீண்டும் ஆண்டி அம்லபலத்துக்கு திமுக தலைமை சீட் கொடுப்பது சற்று கடினம் தான். இதனிடையே ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான விஜயன் நத்தம் தொகுதியை கைப்பற்றுவதற்காக காய் நகர்த்தலை தொடங்கியிருக்கிறார்.
மீண்டும் அம்பலம்
நத்தம் விஸ்வநாதன் தரப்பு நடத்திய சர்வேயில் திமுக எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்துக்கு தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நற்பெயர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் ஆண்டி அம்பலத்தையே திமுக வேட்பாளராக களமிறக்கினால் தமது வெற்றி எளிதாகும் எனக் கருதும் அவர் தனது அரசியல் லாபி மூலம் அதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கிறார். நாம் தேர்தலில் வெற்றபெற வேண்டும் என அரசியலில் உழைத்த காலம் போய் நம்மை எதிர்த்து யார் போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காலம் உருவாகியுள்ளது.