நவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்
அமிருதசரஸ்: முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங்கின் கடிதத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதையடுத்து சித்து வகித்து வந்த துறை பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்தும் சித்து புகார் அளித்தார்.
பின்னர் மக்களவை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். அப்போது ராகுல் காந்தி அமேதியில் தோற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என கூறியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் ராகுல் அமேதியில் தோற்றதால், சித்து இன்னும் அரசியலை விட்டு விலகவில்லையா என பாஜகவினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
My letter to the Congress President Shri. Rahul Gandhi Ji, submitted on 10 June 2019. pic.twitter.com/WS3yYwmnPl
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 14, 2019
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10-ஆம் தேதியே ராகுல் காந்திக்கு கடிதத்தை அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் சித்துவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்றுக் கொண்டார். அந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார் முதல்வர்.