குழந்தைக்கு பனியாரம் ஊட்டி வாக்கு கேட்ட மன்சூர் அலிகான்... திண்டுக்கல்லில் ருசிகரம்!
திண்டுக்கல்: தன்னை வேடிக்கை பார்க்க வந்த பெண்ணின் குழந்தைக்கு பனியாரம் ஊட்டிவிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மாம்பழத்துக்கு பதில் ஆப்பிளுக்கு ஓட்டுப்போடுமாறு இதுவரை இரண்டு முறை வாய் தவறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு கேட்டுவிட்டார். ஆனால் அதே திண்டுக்கல் நகரில நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், பல வித்தியாசமான விஷயங்களை செய்து மக்களை கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கடையில் பஜ்ஜி, வடை சுட்டு வாக்கு கேட்டார். இதேபோல் ஊசி மணி, பாசி மணி விற்றும் வாக்கு கேட்டார். டீக்கடையில் டீ குடித்த படியும் வாக்கு கேட்டார்.
இதனிடையே இன்று திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். நாராயணம் பிள்ளை தோட்டத்தில் வாக்கு கேட்ட அவர், தெருவோரம் பலாகாரம் விற்கும் கடையில் அமர்ந்து சாப்பிட்டார்.
அண்ணன் ஆப்பிளை மறக்க மாட்டார் போலயே.. அதிமுகவினர் நக்கல்.. பாமகவுக்கோ சிக்கல்!
மன்சூர் அலிகான் நடிகர் என்பதால் அப்போது ஏராளமான மக்கள் அங்கு அவரை பார்க்க கூடினார்கள். அங்கு தன்னை வேடிக்கை பார்க்க வந்த பெண்ணின் குழந்தைக்கு பனியாரம் ஊட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான இளைஞர்கள் மன்சூர் அலிகானுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.