ரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்
Recommended Video
திண்டுக்கல்: புயல், மழை, வெள்ளம்.. இதெல்லாம் திண்டுக்கல் மாவட்டத்தின் இந்த தலைமுறைக்கு அதிசயமான ஒன்றுதான்.. அதுவும் அதிதீவிர மழைக்கான ரெட் அலெர்ட் திண்டுக்கல்லுக்கும் சேர்த்துவிடப்பட்டதுதான் இப்போது இங்கே பேசுபொருள்.
கிழக்கு தொடர்ச்சி மலைகளின் நீட்சியான சிறுமலையும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் பெரும் அரவணைப்பும் கொண்டதுதான் திண்டுக்கல். ஆனாலும் நீர்வளம் என்பது காணக்கிடைக்காத ஒன்றாகிப் போன பூமி.
ஐப்பசியில் அடைமழையால் அணைகள் நிரம்பி வழியும் - அன்றே ரெட் அலர்ட் கொடுத்த பஞ்சாங்கம்
நகர வாழ்க்கை
வெள்ளாமை நிலத்தை காங்கிரீட் வீடுகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு புறநகரத்து இண்டு இடுக்குகளில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள். ஒரு கிராமத்துக்கும் இன்னொரு கிராமத்துக்குமான இடைவெளியாக இருந்த வேளாண் நிலம் அத்தனையும் வீடுகளாகிப் போய் அத்தனை கிராமங்களும் இணைந்து புதிய பேரூராக நிற்கிண்றன.
நீரோடும் வாய்க்கால்கள்
மழைகால வாய்க்கால்களில் பெருக்கெடுத்து நீர் ஓடிய காலமும் இருந்தது. இப்போது வாய்க்கால்களின் சுவடுகள் அரிதாகிப் போனது. வேடசந்தூர் குடகனாற்றில் வெள்ளம் வந்தது, வேடசந்தூர் ஆத்துமேடு பாலமே மூழ்கியது. நல்லமனார்கோட்டையே மூழ்கியது என்கிற மழைக்கால வரலாற்று சோகமும் பெருமிதங்களும் செவிவழி சேதிகளாகிப் போய்விட்டன.
கஜா புயல் தாக்கம்
இந்நிலையில்தான் அதிசயமாக கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு காட்டு காட்டியது. அப்போதுதான் புயலின் வலி என்ன என்பதை இந்த மண்ணும் உணர்ந்தது. பொதுவாக ராமேஸ்வரத்தில் புயல் கரையை கடந்தால் அதன் தாக்கம் திண்டுக்கல் பகுதிகளில் எதிரொலிக்கும். மற்ற புயலும் சூறவாளியும் திண்டுக்கல்லைப் பொறுத்தவரை எது எங்கிட்டோ மெட்ராஸ் பக்கம், பாண்டிச்சேரி பக்கமாப்பு என்கிற ரீதியாகத்தான் இருக்கும்.
ரெட் அலர்ட்டில் திண்டுக்கல்
இப்படியான பின்புலத்தில்தான் திடீரென திண்டுக்கல் மாவட்டத்தின் பெயரும் கடந்த சில நாட்களாக கனமழை பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அதுவும் ஒரே நாளில் 22 செ,மீ மழை பெய்யக் கூடிய ரெட் அலெர்ட் என்பது திண்டுக்கல்லுக்கும் சேர்த்துவிடப்பட்டதால் இங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
லீவு எப்போ?
கனமழை கொட்டும் என்றால் முதலில் டிவி சேனல்களை திருப்பிக் கொண்டே இருப்பது வேறு யார்? மாணவர்கள்தான்... நீலகிரிக்கு எல்லாம் லீவு விட்டுட்டாங்கப்பா.. நம்ம ஊருக்கு விடலையே.. இப்படித்தான் நேற்று இரவு முடிந்தது. ரெட் அலர்ட் உண்மைதான் என்பதைப் போல இரவில் மழை தூறல் இருந்தது.
மழையே காணோம்
ஆனால் விடிகாலையில் 'எல்லாமே பொய்யா கோப்பால்' என்கிற ரேஞ்சாகிப் போனது திண்டுக்கல்.. ரெட் அலர்ட்டை முன்வைத்து 'திண்டுக்கல்லுக்காவது மழை வரதாவது' என்று போடப்பட்ட மீம்ஸ் நாயகர்களின் வாக்குகள் பொய்க்கவில்லை. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட திண்டுக்கல்லில் வெயில் இப்போது (பகல் 12.23 மணி) சுள்ளென அடிக்கிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
அப்புறம் என்ன, வானம் பார்த்த இந்த பூமி வழக்கமான தனது பணிகளில் மூழ்கிக் கிடக்கிறது. அது ரெட்டோ ஆரஞ்சோ வரும்போது வரட்டும்.. இன்னிக்கு சோத்துக்கு வழியை பாருங்கப்பு என விரட்டுகின்றன பெருசுகள்