திண்டுக்கல் பாஜக நிர்வாகி செந்தில் பால்ராஜ் இருசக்கர வாகன கடைக்கு தீ - பேகம்பூர் சிக்கந்தர் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர மேற்குப் பகுதி செயலாளர் செந்தில் பால்ராஜ்-க்கு சொந்தமான இருசக்கர வாகன கடைக்கு தீ வைத்ததாக திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை திண்டுக்கல் போலீஸ் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 நாட்களாக பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், நிறுவனங்கள் இலக்கு வைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவும் இல்லை. இத்தாக்குதல்களில் பெரிய அளவு சேதங்களும் ஏற்படவில்லை.
இச்சம்பவங்கள் தொடர்பாக 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது; இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார். மேலும் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகர மேற்குப் பகுதி செயலாளர் செந்தில் பால்ராஜின் இருசக்கர வாகன கடைக்கு தீவைத்ததாக பேகம்பூர் சிக்கந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் செந்தில் பால்ராஜின் கடை உள்ளது. இக்கடைக்கு நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக எரிந்து சாம்பலாயின.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இச்சம்பவத்தில் 2 மர்ம நபர்கள் ஈடுபட்டது அப்பகுதி சிசிடி கேமராக்கள் மூலம் தெரியவந்தது. இன்னொரு பக்கம், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர், திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையி மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் கெடு விதித்தனர்.
தற்போது, செந்தில் பால்ராஜ் கடைக்கு தீ வைத்ததாக பேகம்பூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கந்தரின் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கிய 'காந்த்’.. முக்கோண வியூகம்.. மோப்பம் பிடித்த பாஜக.. எடப்பாடி உறவினர் மாட்டியதற்கு பின்னணி!?