3 நாள் தொடர் லீவு... கோடை விழா.. கூட்டம் கட்டி ஏறியிருக்கனும்... பெருமூச்சு விடும் கொடைக்கானல்!
கொடைக்கானல்: கோடைகால விடுமுறை.. கோடை விழா.. தொடர் விடுமுறை.. இவற்றால் மக்கள் கூட்டம் அலைமோதுகிற கொடைக்கானல் சுற்றுலா தலம் இப்போது லாக்டவுனால் வெறிச்சோடி கிடக்கிறது. தங்களுக்கு வருவாய் தரக் கூடிய உச்சகட்ட சுற்றுலா காலம் இப்படி வெறுமையாய் போனதால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர் கொடைக்கானல்வாசிகள்.
தமிழக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கோடை காலங்களில் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழியும். இதில் கொடைக்கானலும் ஒன்று. கோடை காலங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணம் செல்வது இதமானதுதான்.
ஆனால் மக்கள் கூட்டத்தால் ஒவ்வொரு அங்குலமாக வாகனங்கள் நகரும்போது கொஞ்சம் வேதனையாகவும் இருக்கும். இந்த மக்கள் கூட்டம்தான் பீக் அவர் என்று கொடைக்கானல் மக்களால் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு கணிசமான வருவாய் தரக் கூடிய மாதமும் இதுதான்.
மக்கள் கூட்டம் இல்லை
அதுவும் இன்று மே-1 வெள்ளிக்கிழமை.. அடுத்து சனி, ஞாயிறு.. இந்த தொடர் லீவுகளால் கொடைக்கானல் நகரத்தில் மக்கள் நெரிசலை சமாளிக்கவே முடியாமல் இருக்கும். இப்போது எல்லாமும் தலைகீழாகப் போய்விட்டது. அதுவும் கோடை விழாவும் ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதனால் லாக்டவுனுக்கு பின்பும் கூட கொடைக்கானலின் சுற்றுலா துறை எழுந்திருக்க முடியுமா? என்பது சிரமம் என்கிறார் ஹோட்டல் ஒன்றின் மேலாளர் பிரேம்குமார்.
கட்டிட ஒழுங்கு விவகாரம்
கொடைக்கானல் நகரம் அண்மைக்காலமாகவே பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறது. கட்டிடங்களை முறைப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டன. இதனால் தங்களது வாழ்வாதரத்தை தொலைந்து பெரும் நெருக்கடிக்குள்ளாகினர்.
கோடை சுற்றுலா
இந்த பிரச்சனை தீருவதற்குள் அடுத்ததாக லாக்டவுன் தாக்குதலை தொடுத்துவிட்டது. கொடைக்கானல் நகரமே சுற்றுலாவை நம்பி இருக்கிறது. இந்த சுற்றுலா காலம் என்பதே கோடைகாலம். ஒட்டுமொத்த கோடை காலத்தையும் கொரோனா லாக்டவுன் வாரி சுருட்டிக் கொண்டு போய்விட்டதால் என்னதான் செய்வது என தெரியாமல் விக்கித்து நிற்கின்றனர் கொடைக்கானல் வாசிகள்.
கோடை விழா இல்லை
மே3-ந் தேதியுடன் லாக்டவுன் முடிவடைந்துவிடும்; எப்படியும் அரசும் கோடை விழாவை தாமதமாகவே நடத்தும். அப்போதாவது சொற்ப வருமானம் கிடைத்தாலும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது கோடை விழாவும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இது மிகப் பெரும் ஏமாற்றமாகவும் இருக்கிறது என்கின்றனர் கொடைக்கானல் வர்த்தகர்கள்.
கோடையின் குமுறலுக்கு முடிவு வரட்டும்