வேடசந்தூர் இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதலுக்காக மனைவியே கொலை செய்தது அம்பலம்
திண்டுக்கல்: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பர் என மூவரையும் இரண்டே நாளில் கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திருக்கூர்ணம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகன் மணிவண்ணன் (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23-ஆம் தேதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் மணிவண்ணனின் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து அரவக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தினர். மணிவண்ணனை திண்டுக்கல் மாவட்டத்தில் கொல்லாமல் கரூர் மாவட்டத்தில் கொன்றதால் விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.
வேதனை
கணவர் இறந்த தகவல் அறிந்து பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு அவரது மனைவி காயத்ரிதேவி சென்றுள்ளார். அங்கு அவர் கதறி அழுதது அனைவர் மனதையும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 21 வயதில் கணவனை இழந்துவிட்டாரே என ஊர்காரர்களும் வேதனை அடைந்தனர்.
மைல்டாக ஒரு டவுட்
இதனால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. பல கோணங்களில் விசாரித்து துப்பு ஏதும் கிடைக்கவில்லை. என் கணவர் இல்லாத உலகில் இனி நான் இருக்க மாட்டேன். செத்து போயிடுவேன் என்று உடலை பார்த்து கதறி அழுதார். எனினும் போலீஸாருக்கு மைல்டாக ஒரு டவுட் வந்தது.
காதலித்தேன்
உடனே அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். உண்மையை கக்கி விட்டார். காயத்ரி அளித்த வாக்குமூலத்தில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கமலக்கண்ணனை காதலித்து வந்தேன்.
கெஞ்சிய மணிவண்ணன்
நாங்கள் ஒன்று சேர்வதற்கு எனது கணவர் இடைஞ்சலாக இருந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கமலக்கண்ணனின் நண்பர்களின் உதவியுடன் அவரை கல்லை தூக்கிப் போட்டு நான்தான் கொன்றேன். அவரை உயிரோடு விட்டு விடுமாறு கெஞ்சினார். ஆனால் நாங்கள் விடவில்லை என்றார்.
கைது
மணிவண்ணனின் மனைவி காயத்ரி தேவி (21), அவரது கள்ளக்காதலன் கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா கிழக்கூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கமலக்கண்ணன் (20), இவரது நண்பர் ரூபன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பாராட்டு
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டே நாட்களில் கண்டுபிடித்த அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.