திண்டுக்கல் இளம் பெண் தீக்குளிப்பு சம்பவம்.. அசைக்காமல் வீடியோ எடுத்த மைத்துனர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தடுக்காமல் வீடியோ எடுத்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த நபர் , தீக்குளித்த பெண்ணை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் என தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பன்னைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக் காட்டில் சதீஷ்க்கு அவரது பெற்றோர்களால் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த அப்பா.. வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்.. பெரம்பலூரில் ஷாக்!
உறவினர்கள்
இதனை அறிந்த மாலதி கே.சி.பட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். இந்நிலையில் காதலன் வீட்டு முன்பு நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மாலதியை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடித்து உதைத்து துன்புறுத்தி தகாத வார்த்தையால் திட்டி துரத்தியதாக கூறப்படுகிறது.
காதல் கணவன்
அதனால் மனமுடைந்த மாலதி காதல் கணவன் வீட்டு முன் உள்ள சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே மாலதி இறந்தார். இத்தனை சம்பவங்களையும் எந்தவித கேமரா அசைவுமின்றி அப்படியே ஒருவர் படம் பிடித்திருந்தார்.
சமூகவலைதளங்கள்
சின்னஞ்சிறிய குழந்தையை விட்டு தீக்குளிக்கும் பெண்ணை அங்கிருந்தவர்களோ, தீப்பெட்டி கொடுத்தவரோ, இந்த வீடியோவை எடுத்தவரோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. மனிதநேயம் இல்லை என சமூகவலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது.
விசாரணை
இந்த நிலையில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்தவர் சரவணக்குமார் என்றும் மாலதியை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.