வருடாந்திர பராமரிப்பு பணி எதிரொலி.. பழனி கோயிலில் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனி: வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி மலை கோயிலில் ரோப்கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய, மலை மேல் ஏறுவதற்கு வசதியாக மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மலைக்கோயிலில் பக்தர்களுக்காக படி வழி, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் சேவை வழங்கப்படுகிறது. இரண்டே நிமிடங்களில் பழனி மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் .. உரிமைகள் பறிபோகுமென எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
இதனால் வயதானவர்கள் மற்றும் நோயால் படியேற முடியாமல் அவதிப்படுபவர்கள் எளிதாக கோயிலை சென்றடைய முடிகிறது. பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது ரோப்கார் சேவை.
வழக்கமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார், மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒன்றரை மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இதன்படி நடப்பாண்டில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, இன்று முதல் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளின் போது பழுதடைந்த உதிரி பாகங்கள், தேய்மானமடைந்த உதிரி பாகங்கள், 800 மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி வடம் ஆகியவை மாற்றபட உள்ளதாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரோப்கார் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிய 45 நாட்கள் ஆகும். அதுவரை பக்தர்கள் படிவழிப்பாதை மற்றும் மின்இழுவை ரயிலை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த பிறகு பக்தர்களின் பயன்பாட்டிற்காக, 45 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரோப்கார் சேவை துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.