பழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்
திண்டுக்கல்: பழனியில் சண்முகாநதி ஆற்றுப் பாலம் உடையப்போகிறது என்று சில விஷமிகள் புரளி கிளப்பி விட்டதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி நடந்து சென்று பாலத்தை கடந்தனர். அதுபோல இருசக்கர வாகனங்களும் ஆற்றில் இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சண்முகநதி பாய்கிறது. இந்த நதி புனித நதியாக கருதப்படுகிறது. இந்த நதியின் மீதுள்ள பாலம் மற்றும் சாலைகள் 5 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நதியின் மீதுள்ள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் சில பழுதுகள் ஏற்பட்டதால் இந்த பாலத்தை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக பாலத்தின் கீழே உள்ள தூண்களில் இருந்து பாலத்தை மட்டும் நவீன முறையில் நான்கு இன்ச் உயரத்துக்கு தூக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தின் கீழே ரப்பர் ஸ்ப்ரிங்குகள் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாலத்தை உயர்த்தும்போது பாலத்தில் சிறிய விரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த விரிசலை பார்த்த சிலர் பாலம் உடையப்போகிறது என்று கிளப்பிவிட்டுவிட்டனர்.
இந்த புரளி காட்டுத்தீ போல பரவவே அந்த வழியாக பாலத்தின் மீது சென்ற கனரக வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் பாலத்தின் இருமருங்கிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த வழியாக வந்த பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து செல்லாமல் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து சாலையை கடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் ஆற்றில் தங்களது வாகனங்களை இறக்கி ஓட்டி சென்றனர்.
பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை பார்த்த பிற வாகனங்கள் மானூர், பெத்தநாயக்கன்பட்டி வழியாக மாற்றுவழியில் உடுமலை சாலைக்கு சென்றன. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பாலத்தில் வாகனங்கள் செல்ல எந்த தடையும் இல்லையென பாலத்தை சீரமைத்து கொண்டிருந்த பணியாளர்கள் கூறினர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பாலம் குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.