ஓயாத அதிருப்திக்கு நடுவே போட்டியே இல்லாமல் மலைக்கோட்டை மாவட்டத்து மா.செக்களாக மீண்டும் மகுடம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்களாக எந்த போட்டியுமே இல்லாமல் மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் ஐ.பி. செந்தில்குமார், அமைச்சர் சக்கரபாணியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இரு மாவட்டங்களிலும் கட்சிக்காக நீண்டகாலம் பிரதிபலன் பார்க்காமல் உழைத்த சிலருக்கு பதவி எதுவும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அதிருப்தியும் வலம்வரவே செய்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே இரட்டை அமைச்சர்கள் ராஜ்ஜியம்தான். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி இருவரும்தான் திமுகவின் திண்டுக்கல் முகங்களாக இருந்து வருகின்றனர். இந்த இரு அமைச்சர்களும் தேர்தல் அரசியல் வரலாற்றில் தனித்துவம் பெற்றவர்கள்.
பாறையில் நட்ட மரம்! ரூ.50 லட்சம் அபேஸ் புகார்.. அதிமுக 'மாஜி’ திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்!
ஐ.பெரியசாமி
தமிழக அரசியல் களத்தில் தொகுதிகளை பிரபலங்கள் தேர்வு செய்வது பெரும்பாலும் ஜாதிய வாக்குகளை நம்பித்தான். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி இதில் விதி விலக்கு. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிதான் ஐ.பெரியசாமியின் கோட்டை. ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க எந்த ஜாம்பனாலும் முடியாது என்பதை நிரூபித்தவர். 2016-ம் ஆண்டு தேர்தலில் ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுகவின் ஆகப் பெரும் தூண் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு தோற்றுத்தான் போனார். அப்படியானால் ஐ.பெரியசாமி சார்ந்த சமூகத்தினரா ஆத்தூரில் பெரும்பான்மை வாக்காளர்கள்? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதுதான் விசித்திரம். ஜாதி வேறுபாடுகள் பார்க்காமல் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டதால், செயல்பட்டு வருவதாலேயே ஆத்தூர் தொகுதியின் செல்லப்பிள்ளையாகிவிட்டார் ஐ.பி.
சக்கரபாணி
சக்கரபாணியைப் பொறுத்தவரையில் அவரும் 6 முறை ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்றவர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமிக்கு இணையான செல்வாக்கு பெற்றவர். ஆனால் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு, அமைச்சர் பதவி பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தார். திமுக கொறாடாவாக இருந்தார். இத்தகைய அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி கிடையாது என திமுக தலைமையால் சொல்லவே முடியாத நெருக்கடிக்கு தள்ளியது. ஐ.பெரியசாமி, சக்கரபாணி இருவருக்காவே திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகம், கிழக்கு - மேற்கு எனவும் பிரிக்கப்பட்டது.
ஐ.பி.செந்தில்குமார்
திமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் அமைச்சர் சக்கரபாணியிடம் ஒப்படைக்கப்பட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி அடுத்த நிலைக்கு நகர்ந்ததால் திமுகவின கிழக்கு மாவட்டம் ஐ.பெரியசாமி மகன் ஐ.பி.செந்தில்குமார் வசமானது. அத்தனை அரசியல் கட்சிகள், அமைப்புகளில் உள்ள குமுறல்கள், அதிருப்தி அலைகள் திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ளது. ஆனாலும் அசைக்க முடியாத தூண்களாக நிலைபெற்றுவிட்ட சக்கரபாணி மற்றும் ஐ.பி.மகன் ஐ.பி.செந்தில்குமாருக்கு எதிராக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட முன்வரவும் இல்லை. இதனால் இருவரும் போட்டியின்றி வென்றனர்.
குமுறல்கள், அதிருப்திகள்
இன்னொரு பக்கம், இரு மாவட்டங்களிலும் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்கள் சிலருக்கு இம்முறையும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. சமூக ரீதியான பிரச்சனை, சமூகங்களுக்குள்ளான உள்ளடி பிரச்சனைகள் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் அனைத்து மாவட்ட அரசியலுக்கும் பொருந்தும். இதற்கு திண்டுக்கல் மாவட்டங்களும் விதிவிலக்கு அல்ல. கொள்கைப் பற்று கொண்டவர்கள், கருணாநிதி வாழ்க என்று சொன்ன வாயால் இன்னொரு கட்சிக்கு ஜே போட முடியாது என கறுப்பு சிவப்பு கரை வேட்டியுடன் கட்சிப் பணியை தொடருகின்றனர். என்னடா! இந்த முறையும் சம்பாதிக்க முடியாமல் பண்ணிட்டாங்களே என குமுறுகிறவர்கள் வழக்கம் போல கோலோச்சும் கோஷ்டிகளில் ஐக்கியமாகி வாழ்த்துப்பா பாடுகின்றனர்.