ஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்!
திண்டுக்கல்: சொந்த ஊரில் நள்ளிரவில் மயான பூஜை; மாந்திரீக பூஜை நடத்தினாலே கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் ஊருவிட்டு ஊரு போய் பிறரது குலதெய்வ கோவிலுக்குள் நுழைந்து அத்துமீறி மயானபூஜை செய்தால் பொதுமக்கள் ஆவேசம் எப்படி இருக்கும்?
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ளது எ. பண்ணைப்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு குல தெய்வம். வழக்கமான கோவில்களின் அமைப்புகளில் இருந்து மாறுபட்டு இன்னமும் வேல்கம்புகளுடன் திறந்தவெளி கோவிலாகத்தான் இருக்கிறது.
இக்கோவிலுக்கு செல்லும் அனைவரும் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனர். கோவிலில் திருநீறு என்பது கூட அங்கே எரிக்கப்பட்ட மரத்தின் சாம்பல்தான். இப்படி பயபக்தியுடன் வழிபாடு நடத்தப்படும் பெரியாண்டவர் கோவில் முன்பு திங்கள்கிழமை இரவு சில கார்களும் மர்ம நபர்களின் நடமாட்டமும் இருந்தது பண்ணைப்பட்டி மற்றும் பக்கத்து ஊர் கிராம மக்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து இரவு 12 மணியளவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கே வந்த பொதுமக்களுக்கு பயங்கர அதிர்ச்சி. இதுவரை படையல் வைத்து வழிபாடு நடத்தாத பெரியாண்டவர் சுவாமிக்கு பல கிலோ சாதம் வடித்து மஞ்சள் நீர் கலந்து படைக்கப்பட்டிருந்தது.
— Oneindia Tamil (@thatsTamil) May 15, 2019
அதேபோல் பெரியாண்டவரின் சக்தியாக கருதப்படும் வேல்கள் அனைத்தையும் பூக்களால் கட்டி இருந்தனர். இது பற்றி விசாரித்த பொதுமக்கள், கோவிலுக்கு எதிரே தோட்டம் ஒன்றை வாங்கியிருக்கிறார் வெளியூர் நபர். அவர் வாங்கும் போது செல்வ செழிப்புடன் இருந்த தோட்டம் இப்போது தரிசாகிவிட்டதாம். இதனால் விற்பனையும் ஆகவில்லையாம். இதை சரிகட்ட 5 பூசாரிகளை வரவழைத்து மயான பூஜை நடத்தி இருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதை கேள்விபட்ட பொதுமக்கள் பூசாரிகளையும் பூஜை நடத்திய நபரையும் உடனே கோவிலை விட்டு வெளியே செல்லுமாறு ஆவேசத்துடன் கூறினர். அங்கே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த தேங்காய்கள், பூமாலைகள், மயான அமைப்பு ஆகியவை பொதுமக்களை மிகவும் மிரள வைத்துவிட்டது.
பூஜை நடத்திய நில உரிமையாளரும் பூசாரிகளும் கோவிலை விட்டு வெளியே செல்லும் வரை பொதுமக்களின் ஆவேசம் தணியவில்லை.