முதல் முறையாக ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா - தேனியைவிட அதிகம்- திண்டுக்கல்லில் மீண்டும் லாக்டவுன்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இங்கும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படக் கூடும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு அமலில் இருக்கிறது. தற்போது மதுரையிலும் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வருகிறது. இதுவரை 6 மாவட்டங்கள் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன.
7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை- மாவட்ட எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தம்
முதல் முறையாக 44 பேர் பாதிப்பு
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 357. தற்போது லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட தேனியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 284 தான்.
பிற பகுதிகளில் இருந்து வருகிறவர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாவட்டங்கள், மாநிலங்களில் பணிபுரிகிறவர்கள் அதிகம். உரிய அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் திண்டுக்கல் மாவட்டத்துக்குள் இவர்கள் நுழைகின்றனர். இப்படி பிற இடங்களில் இருந்து வருகிறவர்களுக்கு அதிக அளவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அண்மையில் மும்பையில் இருந்து வந்த நபர் கொரோனாவால் உயிரிழந்திருந்தார்.
அண்டை மாவட்டங்களில்...
தற்போது அண்டை மாவட்டங்களான மதுரையும் தேனியும் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தி இருக்கின்றன. திண்டுக்கல்லில் இருந்து மதுரை, தேனிக்கு நாள்தோறும் கணிசமானோர் சென்று திரும்பி வருகின்றனர். தற்போது இரு மாவட்டங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து போக்குவரத்துகளும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
கடை திறப்பு நேரம் குறைப்பு- லாக்டவுன்?
திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் லாக்டவுன் மீண்டும் அமலாக்கப்படுமோ என்கிற கேள்வி எழுந்தது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுவும் லாக்டவுனுக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என்பது பொதுமக்களின் சந்தேகம்.