கஜா புயலால்.. விடிய விடிய கன மழை.. முடங்கிப் போனது கொடைக்கானல்
கொடைக்கானலில் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
Recommended Video
கொடைக்கானல்: புயல் காரணமாக விடிய, விடிய மழை பெய்த நிலையில் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
கொடைக்கானலில் நேற்றிரவு பல இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. கூடவே பலத்த சூறாவளி காற்றும் சுழட்டி அடிப்பதால் மின்கம்பங்கள், மரங்கள் என எல்லாமே அடியோடு சாய்ந்து கிடக்கின்றன.
நகரெங்கும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பழனி சாலை, வத்தலகுண்டு சாலைகளில் பெரிய பெரிய மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரததை சரி செய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கிடக்கிறது. இரவெல்லாம் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து கொட்டும் மழை நீர், மற்றொரு பக்கம் கரண்ட் இல்லாமல் கொடைக்கானல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் சிக்கி கொண்டுள்ளனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில், வெளியே எங்கியும் போக முடியாமல் விடுதிகளிலேயே தங்கி உள்ளனர். போக்குவரத்தும் சீர்கெட்டு கிடப்பதால் அவர்களால் வெளியேறவும் முடியவில்லை.
110 கி.மீ. தூரம்
கொடைக்கானல் , மேல் மலை, கீழ் மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு நள்ளிரவிலிருந்தே மின்சாரம் இல்லை. இதனிடையே இன்று காலை 8 மணி அளவில் கொடைக்கானலுக்கு 110 கி.மீ., தூரத்தில் கஜா மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முடங்கியது கொடைக்கானல்
இதன் காரணமாக தற்போது அங்கு சுழட்டி சுழட்டி அடிக்கும் சூறாவளிக்கிடையே பலத்த மழையும் பெய்து வருகிறது. ஒரு பக்கம் மீட்பு பணி நடைபெற்று வந்தாலும் மற்றொரு பக்கம் பேய் மழையினால் கொடைக்கானல் நகரமே மிரண்டு கிடக்கிறது.