ஸ்டேட் டூ சென்ட்ரல்.. ஒருத்தரையும் விடலை.. சரமாரி கேள்வி கேட்ட உதயநிதி.. மக்கள் கைத்தட்டல்!
தேனி, திண்டுக்கல் மாவட்ட கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
Recommended Video
திண்டுக்கல்: மாநில அரசிலிருந்து மத்திய அரசு வரை என ஒருத்தரையும் விட்டு வைக்காமல் கேள்வி கேட்டு, பொதுமக்களிடையே பெரும் கை தட்டலை அள்ளிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், திடீரென்று கிராம சபை கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகிறார். தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் என முக்கிய பகுதிகளில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, கட்சி கொடியையும் ஏற்றி வைத்து வருகிறார்.
பிறகு கூட்டம் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூறும் குறைகளை பொறுமையாக கேட்பதுடன், அவர்கள் தரும் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
பிரதமர் மோடி
உதயநிதியை காண மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அவர்களிடையே உதயநிதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் தொடங்கி பிரதமர் மோடி வரை சென்று புகார்களையும், குறைகளையும் அள்ளி தெளித்து விட்டார். அப்போது பேசும்போது அவர் சொன்னதாவது:
நாடு நாடாக சுற்றுகிறார்
"ஆண்டிப்பட்டி பகுதியில் வாழும் நெசவாளர்களின் நலனுக்காக எந்த நலத்திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இப்படி எந்த நல்ல திட்டங்களும் உங்களுக்கு கிடைக்காமல் போவதற்கு காரணமே மத்திய அரசுதான். பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே நாடு நாடாக சுற்றி வருவதுதான் மோடியின் வேலையாக இருக்கிறது.
2 பேர் இருக்கிறார்கள்
எல்லாருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவதாக சொல்லிவிட்டு, இப்போது மக்களின் கணக்கில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்து கொண்டார். இப்படிப்பட்ட பிரதமருக்கு ஜால்ரா அடிக்கவே தமிழ்நாட்டில் 2 பேர் இருக்கிறார்கள். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரைக்கும் மர்மமாகவே உள்ளது.
ஆட்சி மாற்றம் வரும்
மக்கள் விரும்பாமலேயே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பது நம் மாநிலத்தில்தான். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, பொதுமக்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
உரிமை உள்ளது
மக்களை சந்திக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அதிமுகவும், பாஜகவினரும் கேட்கிறார்கள். கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை விட திமுக தொண்டன் என்ற முறையில் தமிழக மக்களை சந்திக்க எனக்கு உரிமை இருக்கிறது" என்றார்.
பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஒருத்தரையும் விட்டு வைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசியதையடுத்து, பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.