கருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல்: நிலக்கோட்டையில் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மறைவின் போது நடந்த நிகழ்வுகளை கூறி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சௌந்திர பாண்டியன் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டது. இதற்காக நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு விடிய விடிய நடந்தது. கடைசியில் அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கலைஞர் தனக்கான இடத்தை மறைந்த பிறகும் போராடி வென்றுள்ளார் என கண்ணீர் மல்க உருக்கமான பேசினார். இந்த பேச்சை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் பெரிய அளவில் கரகோஷம் எழுப்பி உதயநிதியை உற்சாகப்படுத்தினார்கள்.