வேடசந்தூர் எலக்ஷன் ஜூரம்.. அனல் பறக்கும் 'குடகனாறு' அணை அரசியல்
திண்டுக்கல்: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் 'குடகனாறு' அணை விவகாரத்தை முன்வைத்து அரசியல் களம் அனல் பறக்கிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் குடகனாறு அணையை முன்வைத்து சூடுபறக்கும் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்: பாலைவனமான குடகனாறு ஆற்றில் நீர் திறக்க கோரி நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்!
வேடசந்தூர் சட்டசபை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக அதிமுகவின் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும் மீண்டும் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்குதான் வேட்பாளராகும் வாய்ப்பு என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
திமுக அணியைப் பொறுத்தவரையில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி போய்விடக் கூடாது என்பதில் அக்கட்சி நிர்வாகிகள் முனைப்பாக உள்ளனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் திமுக போட்டியிடும் நிலையில் மாஜி துணை சபாநாயகர் எஸ். காந்திராஜனுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் திமுகவினர்.
அதிமுக எம்.எல்.ஏ-காங். எம்பி
வேடசந்தூர் தொகுதியில் ஒவ்வொருநாளும் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகளில் இடைவிடாமல் எம்.எல்.ஏ. பரமசிவம் பங்கேற்கிறார். இன்னொருபக்கம் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சிப்காட் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மல்லுக்கட்டி வருகின்றனர். வேடசந்தூர் சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கரூர் லோக்சபா எம்.பி. ஜோதிமணி கடந்த சில மாதங்களாக இந்த தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ராஜவாய்க்கால்
இந்த நிலையில் குடகனாறு விவகாரம் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல பூதாகரமாகத் தொடங்கியது. கொடைக்கானல் மலைகளில் இருந்து ஓடிவரும் குடகனாறு பாரம்பரிய வழித்தடத்தில் சென்று ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தை அடையும்; அங்கிருந்து குடகனாற்றில் நீர் திறந்துவிடப்பட்டு வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி அணைக்கு செல்லும். அங்கிருந்து திறந்துவிடப்படும் குடகனாறு நீர் கரூர் அருகே அமராவதியுடன் கலந்து காவிரியில் ஐக்கியமாகும். குடகனாறு ஆற்றின் பாரம்பரிய வழித்தடத்தை திசைமாற்றும் வகையில் ராஜவாய்க்கால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் குடகனாறு ஆற்றின் பாரம்பரிய வழித்தடம் திசைமாற்றப்பட்டு நிலக்கோட்டை நோக்கி ஆறு திருப்பிவிடப்பட்டது. எந்த கோரிக்கையும் யாருமே வைக்காமல் பாரம்பரிய குடகனாறு பாசன பகுதிகளை பாலைவனமாக்கிவிட்டு வைகை ஆற்றுடன் செயற்கையாக ஒரு நதிநீர் இணைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக கடந்த 10 ஆண்டுகாலமாக குடகனாறு பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டங்களின் விளைவாக நீர்பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
குடகனாற்றில் நீர் பாய்ந்தது
ஆனாலும் நீர்பங்கீட்டு குழு முடிவு வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே இந்த குழு முடிவு இருக்கிறது. இதனையடுத்து வேடசந்தூர் தொகுதி குடகனாறு பாசன விசாயிகள் இந்த பிரச்சனையை கையிலெடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருடன் எம்.எல்.ஏ. பரமசிவம் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் சென்னையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பிரச்சனையின் தீவிரத்தை எம்.எல்.ஏ. பரமசிவம் விளக்கிய நிலையில், சர்ச்சைக்குரிய ராஜவாய்க்கால் ஷட்டர் மூடப்பட்டு பாரம்பரிய வழித்தடத்தில் குடகனாறு நீர் பாய்ந்தது.
அதிமுக- திமுக எம்.எல்.ஏக்கள் மோதல்
ராஜவாய்க்கால் ஷட்டரை மூடும் விவகாரத்தில் ஆத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமிக்கும் வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தொகுதிகளிடையேயான பிரச்சனையாகவும் மாறிப்போனதும் குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக 10 ஆண்டுகளுக்குப் பின்னர் குடகனாற்றில் நீர் வரத்து வந்தது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அழகாபுரி குடகாறு அணையிலும் வெகுகாலத்துக்குப் பின்னர் நீர் கணிசமான அளவு தேங்கியது.
இம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே!
குடகனாறு அழகாபுரி அணை
இப்போது தொகுதிகளிடையேயான பிரச்சனை என்பது கடந்து போய் வேடசந்தூர் தொகுதிக்குள்ளேயேயான ஒரு அரசியல் விவகாரமாக அடுத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடகனாறு அணையின் ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் நீர் கசிந்து வெளியேறுகிறது; இதனை மறைக்கவே அணை நிரம்புவதற்கு முன்னதாகவே நீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இது வீணாக கடலில்தான் கலக்கிறது என்பது திமுகவினரின் குற்றச்சாட்டு. ஆனால் நீர்கசிவு என்பது இயல்பானது; அணையின் முழு கொள்ளளவை எட்டும் முன்பே வாய்க்காலில்தான் நீர் திறந்துவிடப்பட்டது இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது அதிமுகவினரின் விளக்கம். இந்த குடகனாறு அணை விவகாரத்துடன் ராஜவாய்க்காலை கட்ட உடந்தையாக இருந்தது யார்? ராஜவாய்க்கால் ஷட்டரை திறக்கவிடாமல் தடுத்தது யார்? என்கிற விவாதமும் கிளம்பிவிட்டது. ஆத்தூர் தொகுதியில் இத்தனை காலமாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமிக்கு தெரியாமலா ராஜவாய்க்கால் கட்டப்பட்டிருக்கும் என்பது அதிமுகவினர் குற்றச்சாட்டு. இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு ஏன் ராஜவாய்க்கால் தடுப்பணையை அகறவில்லை என்பது திமுகவினரின் விமர்சனம்.
அணை அரசியல்
அத்துடன் குடகனாறு அணையை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்றும் பார்வையிட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வேடசந்தூர் தொகுதியில் குடகனாறு அணை அரசியல் அனலை கிளப்பி இருக்கிறது.