வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
வேடசந்தூர்: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி எப்படியும் திமுகவுக்கே கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் சுவர்களில் உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்திலும் இறங்கிவிட்டனர் அக்கட்சியினர். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வேடசந்தூர் தங்களுக்கு கிடைக்கும் என போராடுகின்றனர் தொகுதி காங்கிரஸ் பிரமுகர்கள்.
வேடசந்தூர் தொகுதியில் இந்த முறை அதிமுக- திமுகதான் நேரடியாக மோதக் கூடும் என்பது பலரது எதிர்பார்ப்பு. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்தான் கடைசியாக திமுக இங்கு போட்டியிட்டது. திமுகவின் கவிதா பார்த்திபன் 46,561 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
1971, 1989, 1996 தேர்தல்களில் திமுக போட்டியிட்டு வென்றுள்ளது. 1971-க்கு முன்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் மாறி மாறி வென்ற தொகுதி. அதாவது திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட தொகுதி வேடசந்தூர்.
இது ரொம்ப தப்புங்க... அப்றோ கொரோனா பரவலை யாராலும் தடுக்க முடியாது... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா
திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை
இந்த முறை திமுகவுக்கே தொகுதியை ஒதுக்கியாக வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். குறிப்பாக கொரோனா காலத்தில் ஸ்டாலின் நடத்திய நேர்காணல்களில் இந்த கோரிக்கையை அழுத்தமாகவே அக்கட்சி நிர்வாகிகள் வைத்தனர்.
நிலக்கோட்டை, வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் குறிவைத்து கேட்பது 2 தொகுதிகளைத்தான். நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதி. நிலக்கோட்டையை தமது கோட்டையாக வைத்திருந்தார் மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ். பொன்னம்மாள். இப்போது அவரது பேத்தி ஜான்சிராண எப்படியும் சீட் வாங்கி போட்டியிடுவதில் தீவிரமாகவே களப்பணி செய்து வருகிறார்.
வேடசந்தூருக்கு மல்லுக்கட்டு
இதனிடையே காங்கிரஸில் வேடசந்தூர் தொகுதியை பெறுவதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் முயற்சிக்கின்றனராம். திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை காங்கிரஸுக்கு போய்விடும் என்ற நிலையிலும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் வேடசந்தூருக்காக மல்லுக்கட்டுகின்றனராம்.
திமுகவினர் பிரசாரம்
ஆனால் திமுகவினரோ இந்த முறை உதயசூரியன் சின்னம்தான் இங்கு போட்டியிடும். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் உதயசூரியன் சின்னத்துக்கு உழைப்போம் என்ற வகையில் சுவர்களில் இப்போதே உதயசூரியன் சின்னத்தை வரையும் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் வேடசந்தூர் தொகுதி சுவர்களில் உதயசூரியன் இடம்பெற்றுள்ளது அக்கட்சியினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாம்.