டெல்லியும் அண்ணாமலையும் ஆதரவு அளிக்கும் அணி தான் அதிமுக.. பட்டென சொன்ன வேலூர் இப்ராஹிம்! ஓஹோ..!
அண்ணாமலை யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ அதுதான் அதிமுக என வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும் என்றும், தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறார்களோ அதுதான் அதிமுக என்றும் பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் போட்டியிடுவதாக அறிவித்து, கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம், அண்ணாமலை அறிவிப்பதுதான் அதிமுக எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக போட்டியிடாத பட்சத்தில்.. நிச்சயம் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார்.. ஜேசிடி பிரபாகர் சொன்ன பாய்ண்ட்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் - மதில் மேல் பூனை
எடப்பாடி பழனிசாமி தரப்பு விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும், போட்டியிடுவது இல்லையா என்பதில் இன்னுமே மதில் மேல் பூனையாக இருந்து வருகிறார். பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார் என ஓபிஎஸ் அணியின் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
பாஜக திட்டம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தல் எங்களுக்கு முக்கியம் அல்ல, நாடாளுமன்றத் தேர்தல் தான் எங்கள் டார்கெட் எனக் கூறியிருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் அணி, இன்னும் பாஜகவை களத்தில் இறக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி 31ஆம் தேதி அண்ணாமலை, இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக போட்டியிடாவிட்டால், அதிமுகவின் எந்த அணியை பாஜக ஆதரிக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்ணாமலை அறிவிப்பது தான் பாஜக
இந்நிலையில், திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவைத்தான் பாஜக ஆதரிக்கிறது. தேசிய தலைமையும், அண்ணாமலையும் அறிவிப்பது தான் அதிமுக. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்ட அளவில் அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
மாநகராட்சி கவுன்சிலருக்கு மிரட்டல்
தொடர்ந்து பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசுகையில், "திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக, பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் வெள்ளையறிக்கை கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதல்படி, தனபாலன் வீட்டிற்கு சென்று அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பொது மேடையிலேயே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக திருப்பி அடிக்கும்
தனபாலன் உயிருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது போல திமுக அடித்தால், பாஜகவும் திருப்பி அடிக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். பாஜக மாவட்டத் தலைவர் தனபாலனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வரும் ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட உள்ளார்." எனத் தெரிவித்தார்.