வேலுச்சாமி திண்டுக்கல் திமுக வேட்பாளர்: திமுக கோட்டையை உருவாக்குவாரா இந்த புதுமுக வேட்பாளர்?
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் வேலுச்சாமி.
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக வேலுச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(52). ஒன்பதாவது வரை மட்டுமே படித்துள்ள இவர், விவசாயம், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், பெங்களூருவில் பிஸ்கட் கம்பெனி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
சுமார் 25 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருக்கும் வேலுச்சாமி, கட்சியில் வேறு எந்தப் பதவியிலும் இல்லை. கடந்த 2016ல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேலுச்சாமி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், தேர்தல் ரத்தானதால் அவரால் போட்டியிட முடியவில்லை.
இவரது மாமா, கட்சியில் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். வேலுச்சாமி கொங்குவெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். ஆனால் மற்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் புதுமுக வேட்பாளராகத்தான் களமிறங்க இருக்கிறார். கட்சியில் சாதாரண தொண்டருக்கு திமுக தலைமை சீட் வழங்கியிருப்பது தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவருடைய மனைவி பெயர் பரமேஸ்வரி. இவர்களுக்கு நவீன் என்ற மகனும், சுஸ்மா என்ற மகளும் இருக்கிறார்கள்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் 4 முறை திண்டுக்கல்லில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க-வின் உதயகுமார் 5,10,462 வாக்குகள் பெற்று அமோக வெற்றியைப் பதிவு செய்தார். தி.மு.க-வைச் சேர்ந்த எஸ். காந்திராஜன் 3,82,617 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஆனால், திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. இதனால் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலும் வென்று, திண்டுக்கலை திமுக கோட்டையாக்க உடன்பிறப்புகள் திட்டமிட்டு வருகின்றனர்.