திண்டுக்கல் அருகே ரயில்வே சப்வே மீண்டும் கிணறானது... மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொதுமக்களின் வசதிக்கு என ரூ1.60 கோடி செலவில் தெற்கு ரயில்வே அமைத்து கொடுத்த சுரங்கப் பாதை இப்போது வற்றாத கிணறாக உருமாறிவிட்டது. இதனால் 3 கிராம மக்கள் போக்குவரத்துக்கு செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடு அருகே உள்ள எ.பண்ணைப்பட்டி, மணியகாரன்பட்டி, மத்தனம்பட்டி கிராம மக்கள், எரியோட்டில் இருந்து ரயில்வே பாதையை கடந்துதான் ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் ரயில்வே கிராசிங் இருந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப் பாதையை ரூ1.60 கோடி செலவில் ரயில்வே நிர்வாகம் அமைத்து கொடுத்தது. சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்த இந்த சுரங்க பாதை இப்போது கிணறாக உருமாறிவிட்டது.
பிரச்சாரத்திற்கு கனிமொழி தலைகாட்டாத காரணம் ... அண்ணன் மீது மனவருத்தம்?
வெளியேறாத மழை நீர்
ஒரு மாதத்துக்கு முன்பு மழை பெய்த போது சுரங்கப் பாதையில் நீர் தேங்கி நின்றது. வழக்கமாக மழைகாலத்தில் நீர்தேங்குவதைப் போலதானே என நினைத்து எரியோடு பேரூராட்சி நிர்வாகமும் நீரை அகற்றியது. 20 நாட்கள் ஆன பின்னரும் கூட நீர் வெளியேறாமல் தெப்பக்குளம் தேங்கியே இருந்தது.
கிணறு நீர் ஊற்று
இதனால் அப்பாதையை பயன்படுத்திய கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் சுமார் 5 கி.மீ சுற்றிக் கொண்டுதான் கிராமங்களுக்கு செல்லும் நிலைமை உருவானது. பின்னர்தான் சுரங்கப்பாதை அருகே ரயில்வே பணிகளுக்கான ஏற்கனவே மூடப்பட்ட கிணற்றில் இருந்து நீர் ஊற்று எடுத்து வருவது தெரியவந்தது. இந்த நீர் ஊற்றை அடைத்தால் மேலே செல்லும் இருப்புப் பாதைக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
விழிபிதுங்கும் அதிகாரிகள்
நீர் ஊற்று தொடர்ந்து கொட்டி வற்றாத கிணறாக சுரங்கப் பாதை மாறிவிட்டதால் பேரூராட்சி நிர்வாகமும் செய்வது அறியாமல் திகைத்து வருகிறது. இது தொடர்பாக வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் நேரில் பார்வையிட்டு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேம்பாலம் மூலம் தீர்வு
இந்நிலையில் ரயில்வே பாதை விரிவாக்கப் பணிகள் அப்பகுதியில் நடைபெறுகின்றன. இந்த சுரங்க பாதையை பயன்படுத்துவதில் பெரும் சிரமம் இருப்பதால் நிரந்தரத் தீர்வாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். நாடு விடுதலை அடைந்தது முதல் பல்வேறு காரணங்களுக்காக அரசு பேருந்துகள் எட்டிப்பார்க்காத கிராமங்களின் பட்டியலில் இந்த கிராமங்களும்தான் இருக்கின்றன. இந்த மக்களின் சாலை போக்குவரத்துக்கான ஒற்றை நிரந்தர தீர்வாக ரயில்வே மேம்பாலம் அமைப்பதுதான் இருக்க முடியும் என்பதால் தெற்கு ரயில்வே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி கிராம மக்கள்.